கோவை: தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1520 ஆக அதிகரித்துள்ளது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கோவை: தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1520 ஆக அதிகரித்துள்ளது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதனிடையே, தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1477 ஆக இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 43 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று மேலும் 43 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1520 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று மட்டும் 46 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர் என்றும் தமிழகத்தில் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 547 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பால் இன்று இருவர் உயிரிழந்ததன் மூலம் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக கூறினார்.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், திருப்பூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது.
