ஈரோடு: சத்தியமங்கலத்தில் கால்நடைகளைத் தாக்கிக் கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கிய நிலையில், மயக்க ஊசி செலுத்தப்பட்டு தெங்குமரஹாடா வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது.
ஈரோடு: சத்தியமங்கலத்தில் கால்நடைகளைத் தாக்கிக் கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கிய நிலையில், மயக்க ஊசி செலுத்தப்பட்டு தெங்குமரஹாடா வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப் பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. தற்போது வனப்பகுதியில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அருகே உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் வளா்க்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளைத் தாக்கிக் கொல்வது தொடர்கதையாகி உள்ளது.
இந்நிலையில், சத்தியமங்கலம் அருகே பெரியகுளம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக விவசாயத் தோட்டங்களில் உலா வரும் சிறுத்தை கால்நடைகளைத் தாக்கிக் கொன்று வருகிறது. கடந்த வாரம் குப்புசாமி என்பவரது விவசாயத் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை, ஆடு ஒன்றைக் கடித்து இழுத்துச் செல்லும் காட்சி அங்கு பொருத்தப்பட்ட கேமராவில் பதிவானது.
இதைத் தொடா்ந்து வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று அப்பகுதியில் கூண்டு வைத்தனா். பிரத்யேகமாக அமைக்கப்பட்ட கூண்டின் ஒரு பகுதியில் நாயை வைத்து கண்காணித்தனா்.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள பெருமாள் என்பவரது தோட்டத்தில் வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை சிக்கியது.
இதைக் கண்ட அப்பகுதி விவசாயிகள் சத்தியமங்கலம் வனத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் கூண்டில் சிக்கிய சிறுத்தையை மீட்டனா்.

இதையடுத்து, வனத் துறை கால்நடை மருத்துவரை சம்பவ இடத்துக்கு வரவழைத்து, சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு தெங்குமரஹாடா வனப் பகுதியில் சிறுத்தை விடப்பட்டதாக வனத்துறையினா் தெரிவித்தனா்.