கோவை: கோவையில் நிவாரண பொருட்கள் அளவு குறைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கண்காணிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்தார்.
கோவை: கோவையில் நிவாரண பொருட்கள் அளவு குறைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கண்காணிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்தார்.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். கோவை மாவட்டத்தில் 127 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 26 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர் எனவும் 101 நபர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் 18 இடங்களில் தனிமை படுத்தப்பட்ட இடங்களாக வைக்கப்பட்டு அந்த பகுதியில் இருப்பவர்களுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
கடந்த 3 நாட்களாக 2000 பேருக்கு டெஸ்ட் செய்யப்பட்டது எனவும் அதில் 1800 பேருக்கு முடிவு வந்துள்ளது எனவும் இதில் ஒருவருக்கு மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டது எனவும் 210 பேருக்கு டெஸ்ட் ரிசல்ட் வரவேண்டி இருக்கின்றது என கூறிய அவர், கோவை மக்கள் ஊரடங்கு நீடிப்பு காலத்தை புரிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது எனவும் தினமும் வெளியில் வருவதை பொது மக்கள் தவிர்த்திட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கொரோனா பரவல் இருக்கின்றதா ? இல்லையா ? என்பதை ஆய்வு செய்ய மக்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்தால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும் எனவும் அவசியம் இன்றி பொது மக்கள் வீட்டை விட்டு வெளியில் வந்தால் காவல் துறை அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அவர், சமூக விலகல் 100 சதவீதம் பின்பற்ற வேண்டும் எனவும் தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மாவட்டங்களை போல கொரோனா இல்லாத மாவட்டமாக கோவை மாவட்டத்தை கொண்டு வரும் சூழ்நிலை இருக்கின்றது என தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களும் இருக்கின்றது எனவும் கொரோனா நிவாரண நிதியாக இதுவரை 11 கோடி ரூபாய் வந்துள்ளது என்று தெரிவித்த அவர், கிணத்துகடவு பகுதியில் 5 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகின்றது எனவும் சிறுவனின் வீட்டின் அருகே இருக்கும் திருமண மண்டபத்திற்கு டெல்லியில் இருந்து வந்த நபர் சென்று வந்திருப்பது தெரியவந்துள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும், நிவாரண பொருட்கள் அளவு குறைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கண்காணிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்தார்.
இதை தொடர்ந்து பேசிய மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், விதிமுறை மீறியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3000 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் 3500 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், வழக்கு பதிவு செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வழக்கு பதிவு செய்யபட்ட நாளில் இருந்து 10 நாட்கள் கழித்து திருப்பி தரப்படும் எனவும் உடனடியாக வாகனங்களை விடுவிக்க படுவதில்லை என்றார்.
அதேபோல, கோவை மாநகரில் 33 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து 24 மணிநேரமும் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளதாகவும் 1500க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்தார்.