கோவை: கோவை மாநகரப் பகுதி 22 கட்டுப்பாட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரி தீவிரம் காட்டி வருகின்றனர்.
கோவை: கோவை மாநகரப் பகுதி 22 கட்டுப்பாட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள கோவை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரி தீவிரம் காட்டி வருகின்றனர்.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து தமிழக சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நடவடிக்கைகளில் ஒன்றாக கோவையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நபர்களின் வீடுகளை சுற்றியுள்ள சுமார் ஐந்து கிலோ மீட்டர் பகுதிகளை நோய்த் தொற்று கட்டுப்படுத்தும் மண்டலமாக அறிவிக்கப்பட்டு அதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ள துவங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஸ்பெயினில் இருந்து வந்த மாணவிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, நோய்தொற்று கட்டுப்படுத்தும் மண்டலமாக அறிவிக்கப்பட்டு அவரது குடியிருப்பு பகுதியான கே.கே புதூரை சுற்றியுள்ள பகுதிகளில் 37 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், தற்போது கோவை மாநகர எல்லையில் உள்ள 22 பகுதிகளை பொது சுகாதாரத் துறையும் மாநகராட்சியும் இணைந்து நோய்த்தொற்று தடுப்பு மண்டலமாக அறிவித்துள்ளனர்.
இதில் பூ மார்க்கெட், மரக்கடை, ஆர்.எஸ்.புரம், சுந்தராபுரம், குனியமுத்தூர், இடையர்பாளையம், விளாங்குறிச்சி, கோட்டைமேடு, போத்தனூர், உக்கடம் இடையர்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுற்றிலும் உள்ள சுமார் 5 கி.மீ தொலைவுக்கு நோய் தொற்று கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மருத்துவ குழுவினர் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர். மேலும், மருத்துவக் குழுவினர் வீடு வீடாக சென்று இந்த மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ரமேஷ் குமார் கூறும்போது;-
நோய் தொற்றுள்ள குறிப்பிட்ட பகுதிகளில் ஐந்து கிலோ மீட்டர் வரை மக்கள் கண்காணிப்பு எல்லைக்குள் வருவார்கள். மேலும், இந்த பரிசோதனையானது வீடு வீடாக சென்று மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த பரிசோதனையின் போது சாதாரண சளி, காய்ச்சல் இருந்தால் மருந்து மாத்திரைகள் வழங்கப்படும். இதில் ஏதாவது அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு கொரோனோ தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் இந்த பணிகள் மாநகராட்சியின் மூலம் நடைபெறுவதாக தெரிவித்தார்.