கோவை: ஊரடங்கு காலத்தில் ஆட் குறைப்பு, சம்பளம் பிடித்தல் உள்ளிட்டவை செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை: ஊரடங்கு காலத்தில் ஆட் குறைப்பு, சம்பளம் பிடித்தல் உள்ளிட்டவை செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஊரடங்கு காலத்தில் ஆட் குறைப்பு, சம்பளம் பிடித்தல் உள்ளிட்டவை செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், கோவை மாவட்டத்தில் ஊரடங்கு முடியும் வரை அம்மா உணவகங்களில் கட்டமின்றி சாப்பிடலாம் எனவும் அதற்கான கட்டணத்தை அதிமுக ஏற்றுக்கொள்ளும் எனவும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
அதேபோல, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், கொரோனா பாதித்து கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், கொரோனா பாதித்த 59 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க 2 ஆயிரத்து 626 படுக்கைகள் தயாராக இருப்பதாகவும் கூறிய அவர், 385 செயற்கை சுவாச கருவிகள் கையிருப்பில் இருப்பதாக தெரிவித்தார்.
குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், காய்கறி தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருபவர்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை புறக்கணிக்காமல் சிகிச்சையளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.