கோவை: கொரோனா எதிரொலியாக உணவு கிடைக்காமல் இருப்பவர்களுக்கும், தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்யவும், பல்வேறு சந்தேகங்களையும் தீர்க்கும் வகையிலும் மாநகர காவல் துறை சார்பில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது.
கோவை: கொரோனா எதிரொலியாக உணவு கிடைக்காமல் இருப்பவர்களுக்கும், தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்யவும், பல்வேறு சந்தேகங்களையும் தீர்க்கும் வகையிலும் மாநகர காவல் துறை சார்பில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்தொற்று அதிகரித்து வருவதையடுத்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதேபோல, கோவை மாநகர காவல்துறை சார்பில் பொதுமக்கள் சமூக விலகலை பின்பற்ற பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கோவை மக்களுக்கு 24 மணி நேரமும் உதவும் வகையில் மாநகர காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் தற்போது "மினி கன்ட்ரோல் ரூம்" தொடங்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு அறையானது மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின் பேரில் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் மேற்பார்வையில் உதவி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் செயல்பட உள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறை குழுவில் ஆய்வாளர் வீரம்மாள், ஒரு உதவி ஆய்வாளர், 8 காவலர்கள் உட்பட 11 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல இந்த கட்டுப்பாட்டு அறையானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைந்து செயல்பட இருக்கிறது.
மேலும் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள 0422 - 2305758 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 24 மணி நேரமும் செயல்படும் வகையில் இந்த கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த எண்ணில் தொடர்பு கொள்பவர்களுக்கு தேவையான பல்வேறு உதவிகள் செய்யவும், சந்தேகங்களை தீர்க்கவும் மாநகர காவல்துறை தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கொரோனா தொற்று ஏற்படுபவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்ய பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய பிரத்யேக ஆடைகள் மாநகர காவல் துறையினருக்கு வழங்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஒத்திகைகளும் பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.