கோவை: கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக கோவை விமான நிலையத்திற்கு குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கோவை: கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக கோவை விமான நிலையத்திற்கு குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மத்திய அரசு உத்தரவின் பேரில் விமான நிலையங்களில் கடந்த ஜனவரி 20ம் தேதி முதல் பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.
மேலும் வெளி நாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு வருபவர்கள் தீவிர பரிசோதனைக்குப் பின்பே வெளியே அனுப்பப்படுகின்றனர். ஆனால், வைரஸ் அறிகுறிகள் ஏதாவது இருப்பின் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், வைரஸ் அறிகுறிகளுடன் கோவை விமான நிலையம் வரும் நபர்கள் சுகாதாரத்துறையின் ஸ்கிரீனிங்க்கு பிறகு கோவை அரசு மருத்துவமனை மற்றும் இ எஸ் ஐ மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இதனிடையே தற்போது, கோவை விமான நிலையம் மூலம் குறிப்பிட்ட 10 நாடுகளில் இருந்து வரும் 60 வயதுக்கு மேற்பட்டோரை கண்காணிக்க தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஏற்கனவே ஆஸ்துமா, இருதய நோய் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த தனி கண்காணிப்பு மையத்திற்கு சுகாதாரத் துறையால் அழைத்துச் செல்லப்படுவர்.

மேலும், கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள தேஜா சக்தி மகளிர் பொறியியல் கல்லூரி விடுதி, தற்போது சிறப்பு கண்காணிப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதில் 100 படுக்கை வசதிகளுடன் இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது. விமானம் மூலம் வரும் பயணிகள் 14 நாட்கள் தங்க வைத்து கண்காணிக்கப்படுவார்கள். இதில் கொரோனோ அறிகுறி தென்பட்டால் இஎஸ்ஐ மற்றும் அரசு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்படுமெனவும் மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.