கோவை: கோவை காட்டூர் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை: கோவை காட்டூர் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை காட்டூர் பட்டேல் சாலையில் டயர் கடை நடத்தி வருபவர் இக்பால்(54). இவர் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் இன்று மதியம் தனது கடையில் இருந்து தேனீர் அருந்த சென்றுள்ளார்.
அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர். அதேபோல, தாக்குதலை தடுக்க சென்ற ஷாஜகான் என்பவரையும் தாக்கி, தயார் நிலையில் இருந்த ஆட்டோவில் தப்பிச் சென்றனர்.

இதைத்தொடர்ந்து பலத்த காயமடைந்த இக்பால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் தற்போது கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் ஒன்று கூடியுள்ளனர்.

இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் கோவை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
இது குறித்து அனைத்து ஜமாத் இஸ்லாமிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜா உஷேன் கூறும்போது;-

கோவையில் இந்து முன்னனியினர் தொடர்ந்து வன்முறையை கட்டவிழ்த்துள்ளனர். தமிழக அரசு இவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். காவல் துறை கண்காணிப்புகளை அதிகப்படுத்த வேண்டும். இந்த தொடரும் தாக்குதல் சம்பவங்கள் உளவுத்துறையின் பலவீனத்தை உறுதிப்படுத்துகிறது. கோவையை அமைதி நிலைக்கு கொண்டு வர காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.