கோவை: கோவையில் இந்து முன்னணி மற்றும் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் நடத்தும் இன்றைய கடையடைப்பில் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க 2 ஏ.டி.ஜி.பி,.க்கள் தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் இந்து முன்னணி மற்றும் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் நடத்தும் இன்றைய கடையடைப்பில் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க 2 ஏ.டி.ஜி.பி,.க்கள் தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்து முன்னணியின் கோவை மாவட்ட பொறுப்பாளர் ஆனந்த் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்களால் நஞ்சுண்டாபுரம் அருகே வைத்து கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் தாக்கப்பட்டதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கோவை மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் இன்று அறிவிக்கப்பட்டபடி நடைபெற்று வருகிறது.

அதேபோல, கணபதி பகுதியில் உள்ள பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை கண்டித்தும், மேலும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களால் கோவை அரசு மருத்துவமனை முன்பு ஆட்டோ ஓட்டுநர் முகமது கனி தாக்கப்பட்டதை கண்டித்தும் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் கோவையில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த இரு மதத்தினரின் போராட்ட அறிவிப்பால் உக்கடம் மீன் மார்க்கெட், கரும்புக்கடை, ஆத்துப்பாலம், டவுன்ஹால், குனியமுத்தூர், சிங்காநல்லூர், காந்திபுரம், ரத்தினபுரி, புலியகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் பேருந்துகள் வழக்கம் போல இயங்கினாலும் கடையடைப்புகளின் அறிவிப்பால் பொது மக்களின் நடமாட்டம் சற்று குறைவாகவே உள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க கோவை மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல அதிவிரைவு படையினரும் துப்பாக்கிகளை ஏந்தியபடி பதட்டமான பகுதிகள், முக்கிய வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவல்துறை ஏ.டி.ஜி.பி.,க்கள் ஜெய்ஹிந்த் முரளி மற்றும் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மாநகரில் காவல் ஆணையாளர் சுமித் சரண், மாவட்ட காவல் எல்லையில் சுஜித் குமார் ஆகியோர் பாதுகாப்புப் பணிக்காக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ஏடிஜிபி,.க்கள் கோவையில் முகாமிட்டு கோவையின் பாதுகாப்பை கண்காணித்து வருகின்றனர்.