சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அதிகாலை 1 மணிக்கு காலமானார்.
சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அதிகாலை 1 மணிக்கு காலமானார்.
திமுகவின் மூத்த தலைவராகவும், 43 ஆண்டுகளாக கட்சியின் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தவர் பேராசிரியர் க.அன்பழகன் (98). வயது மூப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது உடல்நலக் குறைவை அவர் சந்தித்து வந்தார்.
இந்த நிலையில், மூச்சுத் திணறல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அன்பழகன் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே இன்று அதிகாலை 1 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. இதனை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று அதிகாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அன்பழகனின் உடல் பொதுமக்கள், கட்சித் தொண்டர்களின் அஞ்சலிக்காக, சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் அன்பழகனின் மறைவையொட்டி, கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று முதல் ஒரு வாரம் காலம் ஒத்திவைக்கப்படுவதாகவும் கழக கொடிகள் ஏழு நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.