கோவை: கோவை நரசிபுரம் அருகே காட்டு யானை தாக்கியதில் கூலித் தொழிலாளி சம்பவ இடத்தில் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை நரசிபுரம் அருகே காட்டு யானை தாக்கியதில் கூலித் தொழிலாளி சம்பவ இடத்தில் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த வெள்ளருக்கம்பாளையம் பகுதியை சார்ந்தவர் கிட்டுசாமி. கூலித் தொழிலாளியான இவர் நேற்று பணி முடிந்த நிலையில் மது அருந்திவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, நரசிபுரம் அருகே காட்டுப்பாதை வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த போது புதர் மறைவில் நின்றிருந்த ஒற்றை யானை திடீரென கிட்டுசாமியை தாக்கி தூக்கி வீசியது. இதில் நிலை குலைந்து கீழே விழுந்த அவரை காலால் மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவர் வந்த இருசக்கர வாகனத்தையும் தாக்கி சேதப்படுத்தியது.
இதனையடுத்து, இன்று அதிகாலை அவ்வழியாக சென்றவர்கள் கிட்டுசாமி உயிரிழந்து கிடப்பதை பார்த்து போளுவாம்பட்டி வனத்துறையினருக்கும், ஆலாந்துறை போலீசாருக்கும் தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கிட்டுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர் யானை தாக்கி கிட்டுசாமி உயிரிழந்ததை உறுதி செய்தனர். மேலும் அரசு வழங்கும் நிவார தொகையான 4 லட்சம் ரூபாயில் இருந்து அவரின் இறுதி சடங்கிற்கு 50 ஆயிரம் ரூபாயை அவரது உறவினர்களிடம் வழங்கினர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், கோடைகாலம் துவங்கியதால் மலைப்பகுதியிலிருந்து காட்டு யானைகள் கிராமங்களை நோக்கி வருவதாகவும் இரவு நேரங்களில் வெளியே நடமாட வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினர்.