கோவை: ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ள துணை குடியரசுத் தலைவர் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் என கோவை மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ள துணை குடியரசுத் தலைவர் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் என கோவை மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈஷா யோகா மையம் சார்பாக ஆண்டுதோறும் மகா சிவராத்திரி தினம் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இன்று மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை மகா சிவராத்திரி நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இதில் பல்வேறு முன்னணி அரசியல் கட்சியினர், அதிகாரிகள், கலைஞர்கள் என பல தரப்பினரும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில், இன்று(பிப்., 21) நடைபெற உள்ள மகாசிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொள்ள உள்ளார். இதற்காக டெல்லியிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்த அவர், கோவை அவிநாசி சாலையில் உள்ள பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.
சுமார் ஒரு மணிநேரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்குப் பின்பு நீலாம்பூர் புறவழிச்சாலை வழியாக மதுக்கரை சென்று கோவைப்புதூர் வழியாக பேரூர் சென்று ஈஷா யோகா மையம் சென்றடைய உள்ளார்.
இதைதொடர்ந்து மாலை 5 மணி அளவில் ஈஷா யோகா மையத்தை பார்வையிடும் துணை குடியரசுத் தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார். பின்னர் இரவு ஈஷா யோகா மையத்தில் தங்கும் அவர் சனிக்கிழமை காலை விமானம் மூலம் ஹைதராபாத்திற்கு செல்ல உள்ளார்.
துணை குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு பணிகளுக்காகவும் ஈஷா யோகா மைய நிகழ்வின் பாதுகாப்பு பணிகளுக்காகவும் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா உத்தரவின் பேரில், மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, மேற்கு மண்டல காவல் எல்லையில் உள்ள பல்வேறு மாவட்ட போலீசார் என கிட்டத்தட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.