கோவை: எல்.ஐ.சி நிறுவனத்தின் ஒரு பகுதி பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை கண்டித்து கோவை மண்டல எல்.ஐ.சி அலுவலகம் முன்பாக ஊழியர்கள் ஒரு மணி நேரம் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: எல்.ஐ.சி நிறுவனத்தின் ஒரு பகுதி பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை கண்டித்து கோவை மண்டல எல்.ஐ.சி அலுவலகம் முன்பாக ஊழியர்கள் ஒரு மணி நேரம் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்க முடிவு செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. மத்திய அரசின் இந்த முடிவை கண்டித்து இன்று நாடு முழுவதும் ஒருமணிநேர பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என ஊழியர் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை கோட்ட எல்.ஐ.சி தலைமை அலுவலகம் முன்பாக எல்.ஐ.சி ஊழியர்கள் இன்று பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரை பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மத்திய அரசு தனது முடிவை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால் அடுத்த கட்டமாக தொடர் போராட்டங்களில் ஈடுபட இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்தனர். நாடு முழுவதும் 1.25 லட்சம் எல்.ஐ.சி ஊழியர்கள் இன்று ஒரு மணி நேரம் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் அட்சய பாத்திரமாக இருக்கும் எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்யக் கூடாது எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் வலியுறுத்தினர்.