கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் 75 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டாம் அடுக்கு மேம்பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் 75 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டாம் அடுக்கு மேம்பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதில் கோவையின் பிரதானப் பகுதியான காந்திபுரம் பகுதியில் மேம்பாலப் பணிகள் 2014ம் ஆண்டு துவங்கப்பட்டது. 2017ம் ஆண்டு காந்திபுரம் பார்க் கேட் முதல் டெக்ஸ்டூல் வரையிலான நான்கு வழிச்சாலை மேம்பாலம் 120 கோடி ரூபாய் மதிப்பில் 2017ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அதனை 2017 நவம்பர் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி நேரில் வந்து திறந்து வைத்தார்.

இதில் மைசூர், தாளவாடி,பண்ணாரி, சத்தியமங்கலம், கோவில்பாளையம், சரவணம்பட்டி,கணபதி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மேம்பாலத்தை பயன்படுத்தியதால் காந்திபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு குறைந்தது. முதல் மேம்பாலத்தில் காந்திபுரம், திருவள்ளுவர் பேருந்து நிலையம் பகுதியில் ரவுண்டான அமைத்திருக்க வேண்டும் என்பது தொடர் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

அதன் பின்னர் 2017 மார்ச் மாதம் துவங்கப்பட்ட 100 அடி சாலை முதல் ராமகிருஷ்ணா சாலை வரை 1.75 கிலோ மீட்டர் தொலைவில் 75 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் துவங்கப்பட்டு தற்போது பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ளது. இந்த மேம்பாலம் இரண்டாம் அடுக்காக கட்டப்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடி அசைத்து வாகன போக்குவரத்தை துவக்கி வைத்தார்.
இதேபோல, கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் புதிய தீயணைப்பு நிலையங்களை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தொண்டாமுத்தூரில் நடைபெற்ற நேரடி நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் கலந்து கொண்டார்.
