திருப்பூர்: திமுகவுடனான நெருக்கடி என்பது நண்பர்களுக்குள் இருப்பது போன்றது என்றும் தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு தமிழில் நடக்க வேண்டும் என்பது காங்கிரசின் கோரிக்கை என திருப்பூரில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
திருப்பூர்: திமுகவுடனான நெருக்கடி என்பது நண்பர்களுக்குள் இருப்பது போன்றது என்றும் தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு தமிழில் நடக்க வேண்டும் என்பது காங்கிரசின் கோரிக்கை என திருப்பூரில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் இன்று காங்கேயத்தில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பொதுத்துறை நிறுவனங்கள் அதிவேகமாக தனியாருக்கு விற்கப்பட்டு வருகின்றன. தனியாருக்கு ரயில்வே துறை தாரை வார்க்கப்பட்டால், கட்டணம் பல மடங்கு உயரும் என்றார்.
பொருளாதார துறையில் மத்திய அரசு பல தவறுகளை செய்து வருகிறது என்றும் மக்களின் கவனங்களை திருப்பவே, குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் ஜி.எஸ்.டி வரி முறையில் பல மாற்றங்களை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்றவர், பல தொழிற்சாலைகள் இயங்க முடியாத சூழல் நிலவுகிறது என தெரிவித்தார்.
மேலும், ஹைட்ரோகார்பன் திட்டத்தில் மாநில அரசு நினைத்தால் மத்திய அரசின் தேவையில்லாத இந்த திட்டத்தை அமல்படுத்தாமல் இருக்கலாம் ஆனால், எடப்பாடி அரசு அதை செய்யாமல் உள்ளதாக கூறிய அழகிரி, சமஸ்கிருதத்தை காட்டிலும் தமிழ் இனிமையான மொழி, தஞ்சை பெருவுடையார் கோவிலில் தமிழ் முறைப்படியே குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பது காங்கிரஸின் கோரிக்கை என்று கூறினார்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தான், மீண்டும் திமுக உடன் கூட்டணி குறித்தும், சீட் பங்கீடு குறித்தும் பேச வேண்டும் என்றும் திமுக - காங்கிரஸ் உடனான நெருக்கடி என்பது, நண்பர்கள், குடும்பத்திற்குள் வரும் நெருக்கடி போன்றது எனவும் இயல்பான ஒன்றுதானே தவிர வேறு எதுவும் இல்லை என அவர் தெரிவித்தார்.