திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காட்டூர் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்திய லாரிகளை பறிமுதல் செய்ததை விடுவிக்கக்கோரி வருவாய் துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில், ஆய்வாளர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காட்டூர் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்திய லாரிகளை பறிமுதல் செய்ததை விடுவிக்கக்கோரி வருவாய் துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில், ஆய்வாளர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காட்டூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் கார்த்திக் இவர் கடந்த 24ஆம் தேதி அப்பகுதி வழியாக அனுமதியின்றி கடத்திச் செல்லப்பட்ட மணல் லாரியை மடக்கி பிடித்தார்.
இந்த தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி, கார்த்திக்கு போன் செய்து அந்த லாரியை விடுவிக்குமாறு தெரிவித்துள்ளார். மேலும், கலெக்டர் முதல் தாசில்தார் வரை அனைவரையும் அவர்கள் கவனிப்பதாகவும், "கார்த்திக் உங்களுக்கு எவ்வளவு வேண்டும்", என விடாப்பிடியாக கேட்கும் ஆடியோ வெளியாகியுள்ளது.
மேலும், அவர் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மணல் லாரியை பிடிக்கும் அதிகாரமில்லை என தெரிவிக்கிறார்.
அதற்கு கார்த்திக் - அப்படியானால் நீங்கள் வந்து பிடியுங்கள் என சொல்லும்பொழுது நான் பார்த்தால் பிடித்துக் கொள்கிறேன், இப்போது பிடித்துள்ள இந்த லாரியை விடுங்கள் என அந்த வருவாய் ஆய்வாளர் அந்த ஆடியோவில் கூறியுள்ளார்.
நேர்மையான அதிகாரியை உயர் அதிகாரி மிரட்டிய ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த விவகாரம் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே. விஜய கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் பேசும்போது இவ்விவகாரத்தில் முறையான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் இல்லாது நடவடிக்கை இருக்கும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.