கோவை: தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் சைலேந்திரபாபு கோவை தெற்கு தீயணைப்பு துறை அலுவலகத்தில் ஆய்வுப் பணிகள் மேற்கொண்டு துறையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
கோவை: தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் சைலேந்திரபாபு கோவை தெற்கு தீயணைப்பு துறை அலுவலகத்தில் ஆய்வுப் பணிகள் மேற்கொண்டு துறையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
கோவை மேற்கு மண்டல தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்த ஆய்வினை மேற்கொள்ள கோவை தெற்கு தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் சைலேந்திர பாபு ஆய்வு மேற்கொண்டதுடன் கண்காட்சியை பார்வையிட்டார்.

இதன் தொடர்ச்சியாக தீயணைப்புத்துறை வீரர்கள் அவருக்கு துறை ரீதியான மரியாதை செலுத்தினர்.

இதைதொடர்ந்து பேசிய சைலேந்திரபாபு, தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், இந்திய அளவில் நடைபெற்ற தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்களுக்கான போட்டியில் 46 பதக்கங்களை பெற்று தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அவர் கூறும்போது;-
தமிழகத்தில் 331 தீயணைப்பு நிலையங்கள் உள்ளது.கடந்த ஆண்டில் 25 ஆயிரத்து 400 இடங்களில் ஏற்பட்ட தீ விபத்துகள் தடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள் தீ தடுப்பு சம்மந்தமாக வந்துள்ளது. தீ விபத்து மற்றும் நீர் நிலைகளில் சிக்கிக்கொண்ட 250 பேரை தீயணைப்பு துறையினர் காப்பாற்றியுள்ளனர். கிணறு மற்றும் நீர் நிலைகளில் சிக்கிக்கொண்ட 1200 மாடுகளை மீட்டுள்ளனர். தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 பேர் கொண்ட அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக வனப்பகுதிகளில் ஏற்படும் தீயை கட்டுப்படுத்த தீயணைப்புத் துறையில் உள்ள பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் வனத்தீயை கட்டுப்படுத்த 700 அதிரடிப்படை வீரர்கள் தயாராக உள்ளனர். நேற்று தக்கலையில் ஏற்பட்ட வனத்தீயை தீயணைப்பு அதிரடிப்படை வீரர்கள் தடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 3,600 பள்ளி குழந்தைகளுக்கு, வீட்டில் பாம்பு நுழைந்தால் பிடிக்கவும், தீ விபத்தை தடுக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்த பயிற்சி தேவைப்படுபவர்கள் அந்தந்த மாவட்டத்திலுள்ள தீயணைப்பு அலுவலரை அணுகலாம் தெரிவித்தார்.