கோவை: கோவை பூலூவாம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் கொடிக்கம்பத்தை அகற்றச் சொல்லி இந்து அமைப்பினர் ஒன்று கூடி அகற்றியதாக பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை பூலூவாம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் கொடிக்கம்பத்தை அகற்றச் சொல்லி இந்து அமைப்பினர் ஒன்று கூடி அகற்றியதாக பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பூலுவாம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பம் கலர் பூசி மீண்டும் அதேபகுதியில் வைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து இன்று அந்த கம்பத்தில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் கொடியேற்றி மரக்கன்றுகளை அப்பகுதி மக்களுக்கு இலவசமாக கொடுத்தனர்.
இதையடுத்து அங்கு வந்த இந்து அமைப்பினர் கொடிக்கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் கொடி கம்பத்தை அகற்ற முயற்சித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தகவல் அறிந்து வந்த ஆலாந்துறை போலீசார் இந்து அமைப்பினரை சமாதானப்படுத்தினர். மேலும் போலீசார் நாம் தமிழர் கட்சியின் கொடி கம்பத்தை அகற்ற வற்புறுத்தினர். இதைத்தொடர்ந்து கொடிக்கம்பம் அகற்றப்பட்டது.
இது குறித்து தொண்டாமுத்தூர் தொகுதி செயலாளர் வழக்கறிஞர்.சசிக்குமார் கூறும்போது;-
நாம் தமிழர் கட்சியின் கொடிக்கம்பம் ஏற்கனவே ஆலாந்துறை காவல் நிலையத்தில் அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தேர்தல் விதிமுறைகள் வந்ததையடுத்து கம்பத்தை நாங்கள் அகற்றி மீண்டும் கலர் பூசி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்கனவே வைக்கப்பட்ட இடத்தில் கம்பத்தை நட்டினோம்.
ஆனால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத இந்து முன்னணியினர் ஊர் பொதுமக்கள் போல கம்பத்தை அகற்ற வலியுறுத்துகின்றனர்.
மேலும் புறநகர்ப் பகுதியில் நாம் தமிழர் கட்சியை உள் வர அனுமதிக்க மாட்டோம் எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. மேலும் மாற்று மொழியைச் சேர்ந்தவர்கள் நாம் தமிழரை கட்சி போர்வையில் ஊர்மக்கள் போல எதிர்ப்பது தமிழ்நாட்டில் தமிழரின் உரிமை மறுக்கப்படுவதை உணர்த்துகிறது.
இந்த விஷயத்தை நாங்கள் சட்டப்படி அணுகுவோம். இதுதொடர்பாக நாங்கள் எங்கள் தலைமைக்கு தகவல் தெரிவித்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.