கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் மாவட்ட பகுப்பாய்வு அறிக்கை மற்றும் திட்டம் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தலைமையில் நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் மாவட்ட பகுப்பாய்வு அறிக்கை மற்றும் திட்டம் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது;-
தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் துவங்கப்பட்ட தனித்துவம் வாய்ந்த திட்டமாகும். இத்திட்டம் வறுமை ஒழிப்பு என்றும் செயல்பாட்டையும் தாண்டி தொழில் மேம்பாடு, நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவற்றின் மூலம் ஊரக பகுதிகளின் சமுதாயத்தில் வளம் மற்றும் நிலைத்த உயர்வினை உருவாக்கி பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
தமிழ்நாடு புதுவாழ்வு திட்டம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் ஆகிய திட்டங்களின் மூலமாக ஏற்படுத்தப்பட்ட பல்வேறு முதலீடுகள் மற்றும் சமுதாய அமைப்புகளின் மூலதனங்களை அடிப்படையாக கொண்டு தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
முந்தைய திட்டங்களால் உருவாக்கப்பட்ட சொத்துகள், தளங்கள் மற்றும் திறன்களை கொண்ட சுயஉதவிக்குழு உறுப்பினர்களின் குடும்பங்களே இத்திட்டத்தின் முதன்மை இலக்கு ஆவார்கள். இத்திட்டத்தில் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் உள்ள வேளாண் சார்ந்த மற்றும் வேளாண் சாரா துறைகளை சேர்ந்த உற்பத்தியாளர்கள் இணைந்த குழு கூட்டமைப்புகள் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோர் பயனடையலாம்.
இத்திட்டமானது தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் 120 வட்டாரங்களில், 3994 கிராம பஞ்சாயத்துகளில் இரண்டு கட்டங்களாக 6 ஆண்டுகள் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கான மதிப்பீடு நிதி ரூ.918.20 கோடி ஆகும். இத்திட்ட நிதியானது உலக வங்கிக்கும், தமிழக அரசுக்கும் இடைய 70:30 விகிதத்தில் அமைந்துள்ளது. உலக வங்கி உதவியாக ரூ.642.74 கோடி மற்றும் தமிழக அரசு பங்களிப்பு ரூ.275.46 கோடி ஆகும்.
கோவை மாவட்டத்தில் காரமடை, பெரியநாயக்களன்பாளையம், சர்க்கார் சாமக்குளம் மற்றும் அன்னூர் ஆகிய வட்டாரங்களில் 54 கிராம பஞ்சாயத்துக்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இப்புதிய திட்டத்தின் மூலம் ஊரக பகுதிகளில் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதுடன் அவர்களது பொருளாதாரம் மேம்பட மாவட்ட அளவிலும் மற்றும் வட்டார அளவிலும் அனைத்து துறையை சார்ந்த அலுவலர்கள் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்தார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் செல்வராசு, மாவட்ட செயலாளர் (தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம்) பிலிப்ஸ் இளையராஜா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.