கோவை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் சாலையோர கடைகளில் பல்வேறு பொருட்களின் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
கோவை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் சாலையோர கடைகளில் பல்வேறு பொருட்களின் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
உழவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். புத்தாடை அணிந்து புதுப்பானையில் புத்தரிசி இட்டு பொங்கல் வைத்து மகிழ்வர். இதையடுத்து உழவிற்கு பேருதவியாக இருந்த சூரியனுக்கும், பிற உயிர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்படுகிறது. அதேபோல, மாடுகளை குளிப்பாட்டி உணவு கொடுத்து மாட்டு பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்படும்.
இந்நிலையில், கோவையில், பொங்கலுக்கு தேவையான பொருட்களின் விற்பனை படுஜோராக நடைபெற்று கொண்டிருக்கிறது. குறிப்பாக பூமார்க்கெட், டவுன்ஹால், காந்திபுரம் உள்ளிட்ட சாலைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கோவை பூமார்க்கெட் சாலையில் பொங்கல் பண்டிகையையொட்டி சாலையோர கடைகள் அதிகரித்துள்ளன. இதனால் அப்பகுதியில் கரும்பு, பனை ஓலைகள், மூன்று கண் மண் அடுப்புகள், கொம்பு மஞ்சள், பொங்கல் பானை, மா இலை, கோலப்பொடி, மஞ்சள் குலை, பனங்கிழங்கு, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.1,500. கனகாம்பரம் ரூ.2,000, கலா் பிச்சிப்பூ ரூ.1,200, ரோஸ் ரூ.220, மரிக்கொழுந்து ரூ.150, செவ்வந்தி ரூ.180, அரளி ரூ.220, நந்தியாவட்டம் ரூ.300-க்கு விற்கப்படுகிறது. மல்லிகைப்பூ வரத்து இல்லாததால், மல்லிகைப்பூ கேட்டு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

15 எண்ணம் கொண்ட கரும்புக்கட்டு ரூ.370-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ. 400க்கு மேல் கரும்புக்கட்டின் விலை இருந்தது. இந்த ஆண்டு வரத்து அதிகமாக இருப்பதால் கரும்பின் விலை குறைந்துள்ளது.