கோவை: கோவை அருகே துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட வி எஸ் கே நகரில் வீட்டை விட்டு பிரிந்து சென்று பேருந்துக்காக காத்திருந்த இளம் பெண்ணை வளர்ப்புத் தந்தை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை அருகே துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட வி எஸ் கே நகரில் வீட்டை விட்டு பிரிந்து சென்று பேருந்துக்காக காத்திருந்த இளம் பெண்ணை வளர்ப்புத் தந்தை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமரின் மகன் துரைராஜ் (49). இவர் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு ஆதரவற்ற சிறுமியான மதுவை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். தற்போது 23 வயதான மது பணிநிமித்தமாக கோவை வந்துள்ள நிலையில், வளர்ப்புத் தந்தையுடன் சொந்த ஊருக்கு செல்ல மறுத்துள்ளார். மேலும் அவர் கோவை வரும் பொழுது தங்க நகைகளை எடுத்து வந்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், அந்த இளம்பெண் இன்று காலை பணிக்கு செல்வதற்காக துடியலூரை அடுத்த வடமதுரை வி எஸ் கே நகர் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்து கொண்டிருந்தார். இதனையறிந்து பின் தொடர்ந்து வந்த துரைராஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மதுவை சரமாரியாக கை பகுதியில் குத்தியுள்ளார்.
பின்னர் தப்பியோட முயன்ற துரைராஜை அப்பகுதி மக்கள் மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்து துடியலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து, துரைராஜை கைது செய்த போலீசார் கத்திக்குத்து தொடர்பான காரணங்களை விசாரணை செய்து வருகின்றனர். காயமடைந்த மது தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் இளம் பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.