கோவை: டிஎஸ்பி விஷ்ணுபிரியா தூண்டுதல் காரணமாக தற்கொலை செய்யவில்லை என்ற சிபிஐ அறிக்கையை ஏற்று மறு புலன் விசாரணை நடத்த வேண்டுமென்ற விஷ்ணுபிரியா தந்தை தாக்கல் செய்த மனுவினை கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கோவை: டிஎஸ்பி விஷ்ணுபிரியா தூண்டுதல் காரணமாக தற்கொலை செய்யவில்லை என்ற சிபிஐ அறிக்கையை ஏற்று மறு புலன் விசாரணை நடத்த வேண்டுமென்ற விஷ்ணுபிரியா தந்தை தாக்கல் செய்த மனுவினை கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2015ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் மரணம் தொடர்பான வழக்கை டிஎஸ்பி விஷ்ணுபிரியா விசாரணை செய்தார். திடீரென டிஎஸ்பி விஷ்ணுபிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உயரதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்திய நிலையில், சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென விஷ்ணுபிரியா தந்தை ரவி நீதிமன்றத்தை நாடினார்.
இதையடுத்து விசாரணை நடத்திய சிபிஐ, தனிப்பட்ட காரணங்களினால் விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாகவும் குற்றவாளிகள் யாரும் இல்லை என்பதால் இவ்வழக்கை கைவிடுவது எனவும் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது. பின்னர் சிபிஐ அதிகாரிகள் விசாரணை முறையாக நடைபெறவில்லை எனக்கூறி விஷ்ணுபிரியா தந்தை ரவி ஆட்சேபனை மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, இரண்டாவது முறையாக விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், விஷ்ணுபிரியா தூண்டுதல் காரணமாக தற்கொலை செய்யவில்லை என அறிக்கை தாக்கல் செய்தது. இதனை ஏற்றுக் கொண்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மறு புலன் விசாரணை நடத்த வேண்டுமென்ற விஷ்ணுபிரியாவின் தந்தை ரவியின் மனுவினை தள்ளுபடி செய்தது.
இதுகுறித்து விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி பேசுகையில், இந்த உத்தரவினை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் எஸ்.பி. செந்தில்குமார் மீது தனிப்பட்ட புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும், விஷ்ணுபிரியா மரணத்திற்கு நீதி கிடைக்க கடைசி வரை போராடுவேன் எனவும் அவர் கூறினார்.