கோவை: மத்திய அரசை கண்டித்து கோவை மாவட்ட தபால் தந்தி அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை: மத்திய அரசை கண்டித்து கோவை மாவட்ட தபால் தந்தி அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்ட தபால் அலுவலகம் முன்பு இன்று சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உட்பட பத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த மறியல் போராட்டத்திற்கு கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர். நடராஜன், திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் சுப்பராயன் தலைமை தாங்கினர்.

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையை கண்டிக்கும் விதமாகவும், விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற பிரச்சனை, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பறை அடித்தும், சாலையில் அமர்ந்து கொண்டும் மறியலில் ஈடுபட்டவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பி அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த மறியல் போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதே போன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய அரசை கண்டித்து அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.