கோவை: கோவையில் மண் மணம் மிக்க உணவு வகைகளுடன் மூன்று நாட்கள் உணவு திருவிழா வரும் 10ம் துவங்கி 12ம் தேதி வரை கொடிசியா சாலையில் நடக்கிறது.
கோவை: கோவையில் மண் மணம் மிக்க உணவு வகைகளுடன் மூன்று நாட்கள் உணவு திருவிழா வரும் 10ம் துவங்கி 12ம் தேதி வரை கொடிசியா சாலையில் நடக்கிறது.
கோவை விழாவின் ஒரு பகுதியாக மாவட்ட ஓட்டல்கள் சங்கம் சார்பில் உணவு திருவிழா வரும் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை கொடிசியா சாலை மைதானத்தில் நடைபெறுகிறது. இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று ரயில் நிலையம் எதிரில் உள்ள ஆர்.ஹெச்.ஆர் விடுதியில் நடைபெற்றது.

அப்போது, உணவு திருவிழா தொடர்பாக உணவுத் திருவிழா தலைவர் பாலசந்தர் கூறுகையில், அனைத்து வகையான உணவுகள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் 140 கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் உணவு திருவிழாவை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைக்க உள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், காவல்துறை ஆணையர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
இந்த உணவு திருவிழாவில் சிலம்பாட்டம், ஜமாப், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற பல்வேறு வகையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளதாகவும் தெரிவித்த அவர், இந்த உணவு திருவிழாவின் முதல் நாளில் இசைக் கலைஞர் ஸ்டீபன் தேவசு இசை நிகழ்ச்சியும், இரண்டாம் நாள் பிரபல பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் பங்கேற்பதாகவும், மூன்றாம் நாள் பாடகர் திவாகர் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றார்.
கடந்த ஆண்டு விழாவில் 15,000 குழந்தைகள், 35,000 பெரியவர்கள் என ஐம்பதாயிரம் பேர் கலந்து கொண்டதாகவும் இந்த ஆண்டு எழுபதாயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர், உணவு திருவிழாவிற்கு வருபவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது எனவும் உணவு திருவிழா டிக்கெட்டுகளை புக் மை ஷோ ஆன்லைன் மூலமாகவும் விழா நடக்கும் தேதிகளில் மதியம் ஒரு மணி முதல் இரவு பதினோரு மணி வரை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலும் பெற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் கடந்த ஆண்டு ஐந்து கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெற்றதாகவும் இந்த ஆண்டு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சமையல் கலை கலைஞர் தாமு பங்கேற்று உணவு வகை தயாரிப்பு குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்ட உள்ளதாக தெரிவித்த அவர், இந்த உணவு திருவிழாவில் ஆதரவற்றோர் இல்ல குழந்தைகள் 300 பேருக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் பெரியவர்களுக்கு 120 ரூபாய் நுழைவு கட்டணமும் குழந்தைகள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் எனவும் ஒரு நபர் 150 ரூபாய் விலையில் பெரும்பாலான உணவு வகைகளை ருசிக்க முடியும் என்று கூறினார். இந்த சந்திப்பின் போது ஓட்டல் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார், செயற்குழு உறுப்பினர் விவேக் சீனிவாசன், பொருளாளர் பாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.