கோவை: கோவை மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சிலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 17 பேர் உறுதிமொழி ஏற்று பதவிப் பிரமாணம் எடுத்து கொண்டனர். தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் 11-ம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சிலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 17 பேர் உறுதிமொழி ஏற்று பதவிப் பிரமாணம் எடுத்து கொண்டனர். தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் 11-ம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கடந்த 27ந்தேதி மற்றும் 30ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்குகள் கடந்த 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கோவை மாவட்டத்தில் 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 155 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 228 கிராம ஊராட்சி தலைவர் மற்றும் 2034 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 2434 பேர் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கோவையில் மாவட்ட கவுன்சிலர்களாக தேர்தெடுக்கப்பட்ட 17 பேர் உறுதிமொழி ஏற்று பதவி பிரமாணம் எடுத்து கொண்டனர். அதிமுக உறுப்பினர்கள் 10 பேரும், திமுக 5, பா.ஜ.க 2 என 17 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவியேற்றனர்.

அதிமுகவினர் பதவியேற்பின் போது ஓபிஎஸ், இபிஎஸ், அமைச்சர் வேலுமணிக்கு நன்றி தெரிவித்து பதவி ஏற்றுக் கொண்டனர், திமுகவினர் பதவியேற்றபோது அண்ணா வாழ்க என கலைஞர் வாழ்க, ஸ்டாலின் வாழ்க என பதவியேற்று கொண்டனர். திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கொ.ம.தே.க ராதாவேணி பதவியேற்ற போது தீரன் சின்னமலை வாழ்க என கூறி பதவி ஏற்று கொண்டார்.
இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித்குமார், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், கூட்டுறவு சங்கங்களின் இனை பதிவாளர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, ஊரக உள்ளாட்சி தேர்தல் கோவை மாவட்டத்தில் எதிர்பார்ப்பிற்கு மேலாக நல்ல முறையில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது என்றார். மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் வருகின்ற 11 ம் தேதி நடைபெற உள்ளது எனவும் மறைமுக தேர்தலில் எந்த விதமான விதிமீறலுக்கும் இடம் தராமல், நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்படும் என கூறிய அவர், தேர்தல் விதிமீறல் தொடர்பாக 91 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.