கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் நோயாளியின் உறவினர்களை இரவு நேரங்களில் வரும் 'சிறப்பு செக்யூரிட்டிகள்' என்று சொல்லிக்கொள்ளும் மூன்று பேர் அடிக்கடி தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் நோயாளியின் உறவினர்களை இரவு நேரங்களில் வரும் 'சிறப்பு செக்யூரிட்டிகள்' என்று சொல்லிக்கொள்ளும் மூன்று பேர் அடிக்கடி தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தினமும் 7ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 2300க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். இதில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களை சந்திக்க தினமும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருவது வழக்கம்.
இப்படியிருக்க, நோயாளிகளின் அட்டெண்டர்களாக இரவில் தங்குபவர்கள் தடியுடன் சுற்றித்திரியும் செக்யூரிட்டிகளால் தொடர்ந்து இன்னலுக்கு உள்ளாகி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
மனித உரிமையை மீறும் செக்யூரிட்டிகள்

கோவை அரசு மருத்துவமனையில் முதல் ஷிப்டில் 180 ஹவுஸ் கீப்பிங் பணியாளர்களும், 38 செக்யூரிட்டிகளும், மேலும், இரண்டாவது ஷிப்டில் 68 ஹவுஸ் கீப்பிங் பணியாளர்களும் 18 செக்யூரிட்டிகளும் பணிபுரிகின்றனர். அதேபோல, மூன்றாவது ஷிப்டில் 68 ஹவுஸ் கீப்பிங் பணியாளர்களும், 18 செக்யூரிட்டி களும் பணிபுரிகின்றனர். மேலும், இவர்களை கண்காணிக்க 25 சூப்பர்வைசர்கள் துணை மேலாளர் மேலாளர் என உள்ளனர்.

இந்நிலையில், இரவு நேரங்களில் கடந்த 3 மாதங்களாக பணிபுரிந்து வரும் மூன்று செக்யூரிட்டிகள் ரெயின் கோட்டுகள் அணிந்து கொண்டு சர்வாதிகாரிகள் போல கைகளில் தடியுடன் நோயாளிகளையும் நோயாளிகளின் உறவினர்களையும் மிரட்டி வருகின்றனர்.

அதேபோல, இரவில் மருத்துவமனையின் ஓரங்களில் படுத்து உறங்கும் நோயாளிகளின் உறவினர்களை தடியால் தாக்குவது, முகத்தில் டார்ச் லைட் அடித்து துன்புறுத்துவது, நோயாளிகளை அவசரமாக அழைத்து வரும் ஆட்டோ போன்ற வாகனங்களின் காற்றை பிடுங்கி விடுவது, பஞ்சர் செய்துவிடுவது போன்ற பல்வேறு துன்புறுத்தல்களை செய்து வருகின்றனர்.
இவர்களின் நடவடிக்கைகள் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரிந்தும் முறையான விசாரணைகள் நடைபெறவில்லை என புகார் தெரிவிக்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.
கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி இரவு நோயாளிகளின் அட்டெண்டர்கள் மருத்துவமனையின் சில பகுதிகளில் ஓய்வுக்காக அமர்ந்திருந்தனர்.

அப்போது அங்கு வந்த இரவு நேர சிறப்பு செக்யூரிட்டிகள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் மூன்று பேர் நோயாளிகளின் உறவினர்களின் முகங்களில் "டார்ச் லைட்" அடித்து சித்திரவதை செய்தனர். மேலும் அவர்களை அச்சுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அந்த மூன்று பேருக்கும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அவர்கள் அந்தப் பகுதியை விட்டு கலைந்தனர்.

அதேபோல கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி விக்னேஷ் என்ற ஆட்டோ ஓட்டுனர் அவசர சிகிச்சைக்காக ஒரு நோயாளியை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்து விட்டு, அவருடன் வந்த மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளியின் மகனை வீட்டிற்கு அழைத்துச் செல்ல காத்துக்கொண்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து மீண்டும் மனநிலை பாதிக்கப்பட்ட நபரை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு செல்லலாம் என ஆட்டோ அருகே வந்தபோது ஆட்டோ டயரில் காற்று வெளியேற்றப்பட்டு இருந்தது.

இதையடுத்து ஆட்டோ ஓட்டுனர் விக்னேஷ் அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது அந்த மூன்று செக்யூரிட்டிகள் தான் காற்றை பிடுங்கி விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஆட்டோ ஓட்டுனர் விக்னேஷ் கூறும் போது:-
நான் இரவு நேரத்தில் நெஞ்சு வலியால் துடித்துக்கொண்டிருந்த நோயாளியை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தேன். ஆனால் நோயாளியை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு அவரது மனநிலை பாதிக்கப்பட்ட மகனை வீட்டிற்கு அழைத்துச் செல்ல காத்திருந்தபோது மூன்று செக்யூரிட்டிகள் ஆட்டோ டயரின் காற்றை வெளியேற்றியுள்ளனர். இதனால் கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு மேல் மனநிலை பாதிக்கப்பட்ட வரை வைத்து பட்ட பாடு எனக்குதான் தெரியும்.
இப்படி அவசர சிகிச்சைக்காக வருபவர்களிடம் நடந்துகொள்வது மனிதத்தன்மையற்ற செயல் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். இதை தொடர்ந்து அவர் மாவட்ட நிர்வாகத்திற்கு புகாரும் அளித்துள்ளார்.
அதேபோல நேற்று இரவு முதியவர் ஒருவர் மருத்துவமனையின் வளாகத்தில் படுத்து உறங்கி கொண்டிருந்தார். இதைக்கண்ட அந்த 3 செக்யூரிட்டிகள் அவரை தடியால் தாக்கி, எட்டி உதைத்தும் கைகளாலும் தாக்கியுள்ளனர். மேலும், அவர் மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் இந்த மூன்று செக்யூரிட்டிகள் தங்களை ஒரு காவல்துறை அதிகாரியாக நினைத்துக்கொண்டு மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் இதைக்கண்ட நோயாளிகளின் உறவினர்கள் அந்த 3 செக்யூரிட்டிகளின் நடவடிக்கையை தட்டிக் கேட்டனர். இந்த சம்பவங்களை அருகே உள்ள நபர் ஒருவர் தனது மொபைல் போனில் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் எந்த நபரும் தங்களது அதிகாரத்தை கொண்டும் மனித உரிமை மீறலில் ஈடுபட முடியாது என மனித உரிமை ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து மனித உரிமைகள் அமைப்புக்கள் தேசிய கூட்டமைப்பு (NCHRO) ஒருங்கிணைப்பாளர் ப.பா.மோகன் கூறும்போது:-
கோவை அரசு மருத்துவமனையில் புதிதாக செக்யூரிட்டிகள் நோயாளிகளிடம் மற்றும் அவர்களது உறவினர்களிடம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இரவு நேரங்களில் தூங்கிக்கொண்டிருக்கும் நோயாளிகளின் உறவினர்கள் மீது டார்ச் லைட் அடித்து துன்புறுத்துவதும், அடிப்பதும், குச்சிகளை பயன்படுத்தி தாக்குவதும் அதிர்ச்சி அளிக்கிறது.
அரசு மருத்துவமனையில் தனி மனித உரிமைகள் பாதிக்கப்படும் படி நடைபெறும் இந்த சம்பவங்கள் தண்டனைக்குரியது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் செக்யூரிட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.