கோவை: கோவை மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
கோவை: கோவை மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 315 மையங்களில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. கோவையில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 155 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும், 228 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், 2034 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் என மொத்தம் 2434 பதவிக்கு தேர்தல் நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் முதல் கட்டமாக 5 ஊரக உள்ளாட்சிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 77.31 சதவீதம் வாக்கு பதிவும் இரண்டாம் கட்டமாக 7 ஊரக உள்ளாட்சிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 75.69 சதவீதம் வாக்குகளும் பதிவானது. கோவை மாவட்டத்தில் 12 வாக்கு எண்ணும் மையங்களில் 3753 அலுவலகர்கள் வாக்கு எண்ணும் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் 12 ஊரக உள்ளாட்சிக்கு நடத்தப்பட்ட தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, அன்னூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஒன்றாவது வார்டு பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும் அன்னூர் அ.தி.மு.க ஒன்றிய செயலாளருமான அம்பாள் பழனிச்சாமி 905 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
மேட்டுப்பாளையம் காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓடந்துறை ஊராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த ராஜன் என்கிற தங்கவேல் வெற்றி பெற்றுள்ளார். கடந்த நான்கு முறை தலைவராக இருந்த அதிமுகவை சேர்ந்த சண்முகம் 57 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் டி.சி.பிரதீப் முன்னிலை வகிக்கிறார். ஒன்றிய கவுன்சிலருக்கான 9 இடங்களில் நரசிபுரம், தேவராயபுரம், தென்னம்மநல்லூர் ஆகிய 3 இடங்களில் அதிமுக முன்னிலை வகிக்கிறது.