கோவை: கோவையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை கோவை மாநகர தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை கோவை மாநகர தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கஞ்சா போதைக்கு அதிக அளவில் அடிமையாகி வருகின்றனர். இதில் வட மாநிலத்தைச் சேர்ந்த கஞ்சா விற்பனையாளர்கள் மாணவர்களை குறிவைத்து தீவிர விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட போலீசாரும் கோவை மாநகர போலீசாரும் தொடர்ந்து கஞ்சா விற்பனையாளர்களை தடுக்கும் நோக்கில் கண்காணிப்புகளில் ஈடுபட்டு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல, கஞ்சா போன்ற போதை பொருட்களை ஒழிக்கும் நோக்கில் மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசாரும் அந்தந்த காவல் எல்லைக்குட்பட்ட போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பெரியகடைவீதி அருகே சந்தேகத்துக்குரிய காரை மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, காருக்குள் இருந்த 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, காரில் இருந்த மூவரை பிடித்து அவர்களிடம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கஞ்சா பொருட்களை ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கொண்டுவந்து கோவையில் மாணவர்களிடம் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஜெயபால், திரன்மஹரனா, பருண்டக் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.