கோவை: கோவை சுந்தராபுரம் அருகே எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட மின் பொறியாளரின் உடல் இன்று அவரது வீட்டிலேயே உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
கோவை: கோவை சுந்தராபுரம் அருகே எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட மின் பொறியாளரின் உடல் இன்று அவரது வீட்டிலேயே உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
கோவை சுந்தராபுரம் அருகே உள்ள குறிச்சி கல்லுக்குழி வீதியை சேர்ந்தவர் சக்திவேல் (42). பெங்களூரில் மென் பொறியாளராக பணியாற்றி வந்த இவர் கடந்த மூன்று ஆண்டுக்கு முன் பணியில் இருந்து விலகி கோவையிலேயே பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் சக்திவேலுக்கும் அவரது மனைவி அழகுக்கும் தொடர்ச்சியாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் உறவினர்கள் யாருடனும் தொடர்பில் இல்லாத சக்திவேல், திருநெல்வேலியைச் சேர்ந்த தனது அக்கா வீட்டாருடன் மட்டும் தொலைபேசி மூலம் அடிக்கடி பேசிவந்துள்ளார். ஆனால் கடந்த ஆறு மாத காலமாக சக்திவேலிடமிருந்து எந்த அழைப்பும் வராததால் அவரின் அக்கா மகன் தினேஷ், சக்திவேலை சந்திக்க கோவையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளார் .
இதையடுத்து, தினேஷ் வீட்டை திறந்து பார்த்த பொழுது எரிந்த நிலையில் இருந்த சணல் சாக்கு, தேங்காய் சிரட்டை, காகிதங்கள் ஆகியவற்றின் கீழ் கருகிய நிலையில் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், தினேஷ் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் நடத்திய விசாரணையில் இறந்தவர் தினேஷின் மாமா சக்திவேல் என்பது தெரியவந்தது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் தலைமையில் குனியமுத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல இறந்தவரின் உடல் பெருமளவு சிதிலமடைந்துள்ளதால் உடல் கண்டெடுக்கப்பட்ட அவரது வீட்டிலேயே உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது.

கொலை செய்யப்பட்டு உயிரிழந்த சக்திவேல் கழுத்தில் அணிந்திருந்த ருத்ராட்ச கொட்டை மட்டுமே சக்திவேல் என்பதை உறுதி செய்துள்ளதாகவும், கை, கால் கட்டிப்போட்டுக் கொலைசெய்து உடல் எரிக்கப்பட்டுள்ளது என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல இறந்தவரின் உடலில் இருந்த சதையை எடுத்து டிஎன்ஏ பரிசோதனை செய்து அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.