கோவை: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 20ம் தேதி கருப்பு கொடி கட்டி கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
கோவை: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 20ம் தேதி கருப்பு கொடி கட்டி கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அண்டை நாடுகளில் இருந்து குடிபெயரும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த மசோதாவினை திரும்ப பெற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, இந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேன் பேசுகையில், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 20ம் தேதி கருப்பு கொடி கட்டி கடை அடைப்பு போராட்டம் நடத்தபட உள்ளதாக தெரிவித்தார்.
மத்தியில் ஆளும் பா.ஜ.க கட்சி நிர்வாக ரீதியான தோல்வியை மறைப்பதற்கு முத்தலாக் தடை சட்டம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை சட்ட திருத்த மசோதா என சட்டங்களை இயற்றி வருவதாக தெரிவித்தார். மதரீதியாக மக்களை பிரிக்கும் சதி செயல்களை பா.ஜ.க அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், மத்திய அரசின் செயல்பாடுகள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்றார். மியான்மர், பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து இந்தியா வந்துள்ள அகதிகளுக்கு குடியுரிமையை மறுக்கப்பட்டு இங்கு உள்ள அகதிகளை மத்திய அரசு வஞ்சிப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசின் இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி வன்முறையை கட்டவிழ்த்து விட்டு உள்ளதாக கூறிய அவர், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது எப்படி மக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டதோ அதே போன்ற ஒரு விழிப்புணர்வு இந்த சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற மக்களிடையே ஏற்பட வேண்டும் என்றார். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு அதிமுக ஆதரவு அளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது எனவும் இதற்கான விளைவுகளை அவர்கள் விரைவில் சந்திப்பார்கள் எனவும் தெரிவித்தார். வரும் 20ம் தேதி வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவிக்க உள்ளதாகவும் அன்று மாலை ஆத்துபாலம் பகுதியில் கண்டன பொது கூட்டம் நடைபெற உள்ளது. இதில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த், ஐயுஎம்எல், தமுமுக, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, மனித நேய ஜனநாயக கட்சி, ஐஎன்டிஜெ, இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.