கோவை: கோவை அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நல அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூன்று குழந்தைகள் ஒரே நாளில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நல அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூன்று குழந்தைகள் ஒரே நாளில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். இதையடுத்து சுகாதாரத்துறையின் பல்வேறு கட்ட முயற்சிகளின் மூலம் காய்ச்சல்கள் பரவுவது தடுக்கப்பட்டது.
இவ்வாண்டு தொடர் மழையால், கோவை அரசு மருத்துவமனையில் தற்போது 195 பேர் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புடன் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் குறிப்பாக டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 26 பேர், கோவை மாவட்டத்தை 17 பேர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 45 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 36 பேர் குழந்தைகள் என்ற தகவல் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் காய்ச்சல் பாதிப்பு உட்பட அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் பல்வேறு சிகிச்சைகள் பெற்றுவந்த மூன்று குழந்தைகள் இன்று ஒரே நாளில் பலியானது பெற்றோர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் நாச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த சிவக்குமாரின் மகள் அஷ்விகா (7). இவர் கடந்த 5-ம் தேதி காய்ச்சல் பாதிப்புடன் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு டெங்கு வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதை தொடர்ந்து குழந்தைகள் நல அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து என அதே வார்டில் சிகிச்சை பெற்று வந்த கோவை சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த வசந்தன் என்பவரின் மகள் மோனிஷா (5), திருப்பூர் வளவாஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்த சர்வேஷ் (1) என இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், இந்த குழந்தைகள் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் உயிரிழந்தனரா எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த வாரம் மட்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தைகள் ஜெசிந்தா மேரி மற்றும் தரணி ஆகியோர் பலியாகிய நிலையில் மீண்டும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தை பலியாகிய சம்பவம் குறிப்பிடத்தக்கது.