கோவை: கோவை மாவட்டத்தில் அனைத்து ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் கு.இராசாமணி தலைமையில் நடைபெற்றது
கோவை: கோவை மாவட்டத்தில் அனைத்து ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் கு.இராசாமணி தலைமையில் நடைபெற்றது
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(14.12.2019) ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் கு.இராசாமணி அவர்கள் தலைமையில் தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடனானஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) முத்துக்கருப்பன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி 27.12.2019 வெள்ளிக்கிழமை மற்றும், 30.12.2019 திங்கட்கிழமை என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்திட அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளான மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடைபெறவுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி(வடக்கு)) பொள்ளாச்சி(தெற்கு) ஆனைமலை ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் 27.12.2019 அன்று முதற்கட்ட வாக்குப்பதிவும், காரமடை, அன்னூர், சர்க்கார்சாமக்குளம், பெரியநாயக்கன்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர், சுல்தான் பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 30.12.2019 அன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும், ஊரக பகுதிகளில் போஸ்டர், பேனர்கள், சுவர் விளம்பரங்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தத் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் 100 விழுக்காடு பின்பற்ற அரசியல் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் மையங்களில் மதுக்கரை மற்றும் சர்க்கார் சாமக்குளம் தவிர ஏனைய 10 வட்டாரங்களில் பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகள் 84 என மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய வாக்குச்சாவடிகளில் நுன்தேர்தல் மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுப் பார்வையிட நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் புகார் அளிக்கும் வகையில் 24 மணிநேரம் செயல்படும் கட்டணமில்லா தொலைப்பேசி எண் வழங்கப்பட்டு, தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகின்றது. அதன்படி, புகார்கள் தெரிவிக்க 0422-2301587 அல்லது கட்டணமில்லா தொலைப்பேசி எண் 1800 599 6000 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளபடி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் 12வட்டாரங்களில் 2 வட்டாரங்களுக்கு 3 பறக்கும்படை வீதம் 18 பறக்கும் படைக்குழுக்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர். அதுபோலவே, ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 10 முதல் 15 வரையிலான வாக்குச்சாவடிகளுக்கு ஒரு மண்டல அலுவலர் வீதம் நியமனம் செய்யப்பட்டு 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 119 குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இறுதி வேட்பாளர் பட்டியல் 19.12.2019 அன்று இறுதி செய்யப்பட்ட பின்னர் வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
அதன்படி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு மஞ்சள் நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு பச்சை நிறத்திலும், கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், கிராம் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வெள்ளை மற்றும் நீல நிறத்திலும், வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்படவுள்ளது. வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்கள் குலுக்கல் (Randamization) முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர். இது முழுவதும் கணினி முறைப்படி நடைபெறுவதாகும். தேர்வு செய்யப்பட்ட அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் 15.12.2019, 21.12.2019, 26.12.2019 மற்றும் 29.12.2019 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.
அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களும் உள்ளாட்சி தேர்தல்கள் அமைதியாக நடைபெறவும், வெளிப்படையான தேர்தல் நடத்திடவும் நடவடிக்கையினை எடுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர்,/மாவட்ட தேர்தல் அலுவலர் கு.இராசாமணி இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்.