கோவை: தமிழ் புலிகள் கட்சியை தடை செய்ய வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு தமிழக அரசு அடக்கு முறையை ஏவியுள்ளதாக அக்கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோவை: தமிழ் புலிகள் கட்சியை தடை செய்ய வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு தமிழக அரசு அடக்கு முறையை ஏவியுள்ளதாக அக்கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்திய தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை.திருவள்ளுவன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர் மீதுள்ள பல்வேறு வழக்குகளில் காவல் துறை சிறைப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், 17 பேர் உயிரிழந்த போது மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் மருத்துவரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக,நாகை திருவள்ளுவன் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நாகை திருவள்ளுவனை நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்ப கோரிய மனுவினை, கோவை 7வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மணிகண்டராஜா தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மற்ற வழக்குகளில் ஜாமீன் கிடைக்காததால் பலத்த பாதுகாப்புடன் நாகை திருவள்ளுவனை காவல் துறையினர் சிறைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, காவல்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினார்.
இதையடுத்து கோவை நீதிமன்ற வளாகத்தில் தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நிவாரணம் மற்றும் வீடு தரவில்லை எனவும் அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும், தமிழ் புலிகள் கட்சியை தடை செய்ய வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு தமிழக அரசு காவல் துறையோடு இணைந்து அடக்குமுறையை ஏவியுள்ளது எனவும் குண்டர் தடுப்பு சட்டத்தில் தன்னை சிறையில் அடைக்க, பல்வேறு பொய் வழக்குகளை காவல் துறையினர் போடுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.