கோவை: கோவை பார்க் வீதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக வெங்காயம் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: வெங்காயம் விலை உயர்வை கண்டித்து கோவை காட்டூர் பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், வெங்காயத்தை நடுவில் வைத்து ஒப்பாரி வைத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெங்காய வரத்து குறைவு காரணமாக, வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது. வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி,போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை காட்டூர் பகுதியில் உள்ள பார்க் வீதியில் உள்ள அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அலுவலகம் முன்பு அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராதிகா தலைமையில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் வெங்காயத்தை மாலையாக அணிந்து, வெங்காய விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, 'வீதிக்கு வீதிக்கு டாஸ்மாக் கடை வியாபாரம் செய்யும் எடப்பாடி அரசே வெங்காயத்தை வியாபாரம் செய்ய முடிவெடு', மோடி அரசே மோடி அரசே வெங்காய விலையை பார்த்தாயா, தாலிக்கு தங்கம் இல்லை, தாலிக்கு வெங்காயம் இல்லை' என்று வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுக்கு கோஷங்கள் எழுப்பினர்.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, வெங்காயம் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் வட்டமாக அமர்ந்து வெங்காயத்தை நடுவில் வைத்து ஒப்பாரி வைத்தனர்.
தொடர்ந்து, வெங்காய விலை உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டதாக கூறிய மாதர் சங்கத்தினர், குடும்பத்தினர் எண்ணிக்கைக்கு ஏற்ப ரேசன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.