கோவை: கோவை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தில் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் சகோதரர் எஸ் பி அன்பரசனின் தலையீடு அதிகரித்து வருவதை நிறுத்திக்கொள்ளவில்லை என்றால் பொதுமக்களைத் திரட்டி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தில் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் சகோதரர் எஸ் பி அன்பரசனின் தலையீடு அதிகரித்து வருவதை நிறுத்திக்கொள்ளவில்லை என்றால் பொதுமக்களைத் திரட்டி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்தித்த அவர் கூறும்போது;-

கோவை மாநகராட்சியில் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் சகோதரரின் தலையீடு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. அதேபோல, கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளில் போடப்படும் ஒப்பந்தங்களிலும் அமைச்சர் வேலுமணியின் அண்ணன் அன்பரசனின் தலையீடு அதிகளவில் இருப்பதாக தொடர்ந்து விமர்சனங்கள் வெளியாகி வருகிறது.

மேலும், உக்கடம் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் ஸ்மார்ட் சிட்டி திட்டம் பார்வையிடுவது போன்ற செய்தி வெளியீட்டில் சமூக ஆர்வலர் அன்பரசனும் பார்வையிட்டதாக மாநகராட்சி தகவல் தொடர்பு அதிகாரி ஊடகங்களுக்கு செய்தி வெளியிட்டிருந்தார். இதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக கூறிய அவர், புதிதாக கட்டப்பட்டுள்ள தெற்கு மண்டல அலுவலகத்தை அமைச்சர் திறந்து வைப்பதற்கு முன்பாகவே அவரது அண்ணன் அன்பரசன் அலுவலக பூஜை பணிகளை மேற்கொண்டதாக கூறினார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைப் புறக்கணித்து விட்டு பதவிகளில் இல்லாதவருக்கு முதல் மரியாதை கொடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அரசு நிகழ்வுகளில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலும் மக்கள் கோரிக்கைகளை கொண்டு செல்வதாலும் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், அரசின் பல்வேறு திட்டங்களிலும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தில் தலையிட்டு வரும் நிகழ்வை அன்பரசன் நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.
அதேபோல, சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே இடியும் நிலையில் உள்ள வீடுகளில் இருந்து பொதுமக்களுக்கு மாற்று வீடு கொடுத்து அவர்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் 2016 ,2017 ,2018 என மூன்று ஆண்டுகளாக சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்து வருகிறேன்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், சுமார் 800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள அந்த அபாயகரமான வீடுகளில் இருந்து மக்களை காப்பாற்ற வீட்டு வசதி வாரியம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார்.