கோவை: கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள துப்புரவுப் பணியாளர் வேலைக்கான நேர்காணலில் பட்டதாரிகள் உட்படக் கைக்குழந்தைகளுடன் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர்.
கோவை: கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள துப்புரவுப் பணியாளர் வேலைக்கான நேர்காணலில் பட்டதாரிகள் உட்படக் கைக்குழந்தைகளுடன் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர்.

கோவை மாநகராட்சியில் 2 ஆயிரம் நிரந்தரத் துப்புரவுப் பணியாளர்களும், 1,500 ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள 549 நிரந்தர துப்புரவு பணியாளர் வேலைக்கு கோவை மாநகராட்சி விண்ணப்பங்களை வரவேற்றது. அதன்படி 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான நேர்காணல் கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இதற்காக வந்த விண்ணப்பதாரர்கள் வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு தனித்தனியாக நேர்காணல் நடத்தப்பட்டன. அப்போது, துப்புரவு பணிக்கு ஏராளமான பெண்கள் கைக்குழந்தைகளுடன் வந்திருந்தனர். சில துப்புரவு பணியாளர்களின் மனைவியும் நேர்காணலுக்கு வந்திருந்தனர். மாநகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களும், நேர்காணலில் கலந்து கொண்டனர்.
நேர்காணலில் கலந்து கொண்ட பொறியியல் பட்டதாரி மைதிலி பேசுகையில், தந்தை இல்லாததால் தனது குடும்ப சுமையை ஏற்க விரும்புவதாகவும், தனது தாயையும், தங்கையையும் கவனித்துக் கொள்ள விரும்புவதாகவும் கூறியா அவர், இது ஒரு அரசாங்க வேலை என்பதால், தன்னால் முடிந்தவரை இந்த வேலையைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்றுவேன் என்று கூறினார்.
இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
துப்புரவு பணியாளர்களுக்கான வேலைக்கு நேற்று நடந்த நேர்காணலில் 2 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டனர். இன சுழற்சி அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அடிப்படை சம்பளம் ரூ.15,700 மற்றும் படித்தொகைகள், படிகள் சேர்த்தால் வேலையில் சேரும் போது மாத சம்பளம் ரூ.20 ஆயிரம் கிடைக்கும். அதிகபட்சம் அதாவது அனுபவம் வாய்ந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும். தற்போது நேர்காணல் முடிந்து விண்ணப்பதாரர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு முடிவுகள் பின்னர் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்.