கோவை: கோவை டி1-இராமநாதபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 73 கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டதற்கான துவக்க விழாவை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் ஐ.பி.எஸ் துவங்கி வைத்தார்.
கோவை: கோவை டி1-இராமநாதபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 73 கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டதற்கான துவக்க விழாவை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் ஐ.பி.எஸ் துவங்கி வைத்தார்.
கோவை மாநகரில் நடைபெறும் போக்குவரத்து விதிமீறல், கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல், போதைப்பொருள் விற்பனை போன்ற குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்தவும், குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைவாக கைது செய்யவும் மூன்றாம் கண் என சொல்லப்படும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணியை கோவை மாநகர காவல்துறையினர் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.
இந்த கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணியானது மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில், மாநகர காவல் துணை ஆணையாளர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பாலாஜி சரவணன் அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெற்று வருகிறது.
இதில், ஆர்.எஸ்.புரத்தில் துவங்கி, பீளமேடு காவல் எல்லை, சாய்பாபா கோவில் காவல் எல்லை, காட்டூர் காவல் எல்லை, போத்தனூர் காவல் எல்லை, சிங்காநல்லூர் காவல் எல்லை, சரவணம்பட்டி காவல் எல்லை என அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று டி1- இராமநாதபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 73 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டதற்கான துவக்க விழா நடைபெற்றது. மேலும் டி1- காவல் நிலையத்தின் புனரமைக்கப்பட்ட புறக்காவல் நிலையமும் மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரணால் துவங்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் (சட்டம் ஒழுங்கு) பேசுகையில்:-

கோவை மாநகர காவல் எல்லையை தற்போது கூகுள் மேப்பில் இணைத்துள்ளோம். இதில் கேமராக்கள் எங்கெங்கு இயங்குகிறது என்பதை விவரங்களுடன் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

பின்னர், காவல் துணை ஆணையாளர் உமா,. ஐ பி எஸ் (குற்றப்பிரிவு) கூறும்போது, மக்களின் பாதுகாப்பு தன்மையை கண்காணிப்பு கேமராக்கள் உறுதிப்படுத்துகிறது எனவும் கோவை மாநகரம் தற்போது பாதுகாப்பு வலையத்திற்குள் வந்துள்ளதாக தெரிவித்த அவர், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க உதவிய தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்கள், சமூக சேவர்கள் என அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார்.
மேலும் விழாவில் காவல் ஆணையாளர் சுமித்சரண் கூறும்போது:-

கோவை மாநகர தெற்கு காவல் எல்லையில் அதிக அளவில் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் என்பது குற்றத்தை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவைப்படுவதாக கூறிய அவர், மாநகரில் ஒன்பதாயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளதாகவும், தமிழகத்தில் முதன்முறையக கூகுள் மேப்பில் கேமராக்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து விதிமீறலில் தினமும் 3 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது என்று கூறினார்.
மேலும், இதுவரை சிசிடிவி கேமராக்கள் மூலம் ஒன்னரை லட்சம் வழக்குகள் புலனாய்வு செய்யப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்து பாதுகாப்பு பணிகளுக்காக காலை நேரங்களில் கூடுதலாக போலீசார் நிறுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த துவக்க விழா நிகழ்ச்சியில், துணை ஆணையர்கள் பாலாஜி சரவணன், உமா ஐ பி, எஸ், முத்தரசன், உதவி ஆணையாளர் செட்ரிக் மனுவேல், இராமநாதபுரம் காவல் நிலைய முன்னாள் ஆய்வாளர் லதா மற்றும் தற்போதைய ஆய்வாளர் முருகேசன், உதவி ஆய்வாளர் ஜெசிஸ் உதயராஜ் உள்ளிட்ட பல காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.