கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு என பல அடையாளங்கள் இருந்தாலும் தற்போது புதிய அடையாளமாக மேட்டுப்பாளையம் வருவோரை வரவேற்கும் நுழைவு வாயிலாக சாலையோர மரங்கள் மாறியுள்ளது.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு என பல அடையாளங்கள் இருந்தாலும் தற்போது புதிய அடையாளமாக மேட்டுப்பாளையம் வருவோரை வரவேற்கும் நுழைவு வாயிலாக சாலையோர மரங்கள் மாறியுள்ளது.

மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் தான் உள்ளது இந்த அற்புதம். திருப்பூர், ஈரோடு மற்றும் கோவையில் இருந்து அன்னூர் மார்க்கமாக வரும் வாகனங்கள் மேட்டுப்பாளையத்திற்குள் நுழைய தேரம்பாளையத்தை கடந்தே செல்ல முடியும். அப்படி வருவோரை வரவேற்கும் விதமாக சாலையின் இரு புறங்களிலும் நூறாண்டுகள் பழமையான புளியமரங்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு வளர்ந்து வானுயர்ந்து குடைபோல விரிந்து இரு புறமும் உள்ளது.
மேலும், ஒவ்வொன்றும் அடுத்தடுத்து உள்ள மரங்களை ஒன்றை ஒன்று தொட்டு நிற்பதால் இயற்கையாகவே அது ஒரு நுழைவு வாயில் போன்று அமைந்து பசுமை வாயிலாக மாறி, காண்போரை கவரும் வகையில் அமைந்துள்ளது. மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் தேரம்பாளையத்தை கடக்கும் அந்த ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு வெயிலின் தாக்கமே தெரியாத அளவிற்கு குடையின் கீழ் செல்வது போன்ற உணர்வினை ஏற்படுத்தும் வகையில் இந்த மரங்கள் அமைந்துள்ளன.
தேசிய நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இந்த மரங்கள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு நிழலை தருவதுடன் ஆண்டிற்கு ஒரு முறை காய் பிடித்து டெண்டர் முறையில் அரசுக்கு பல லட்சம் வருவாயினையும் ஈட்டி வருகிறது. இந்த நிலையில் மக்களுக்கு நிழலும், மேட்டுப்பாளையத்திற்கு புதிய பெருமையைப் பெற்று தந்துள்ள இந்த மரங்களை சாலை விரிவாக்கம், குடிநீர் குழாய்கள் பதிக்க என மரங்களை சேதப்படுத்தாமல் இவற்றை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.