கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து ரயில்வே தண்டவாளம் அருகே ஆபத்தான நிலையில் சென்று கொண்டிருந்தபோது, சமூக ஆர்வலர்களும் கோவை அரசு மருத்துவமனை ஊழியர்களும் மீட்டு மருத்துவமனையில் மீண்டும் அனுமதித்தனர்.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து ரயில்வே தண்டவாளம் அருகே ஆபத்தான நிலையில் சென்று கொண்டிருந்தபோது, சமூக ஆர்வலர்களும் கோவை அரசு மருத்துவமனை ஊழியர்களும் மீட்டு மருத்துவமனையில் மீண்டும் அனுமதித்தனர்.
கோவை அரசு மருத்துவமனையில் தினமும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும், 2000க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். அதேபோல கோவை உட்பட திருப்பூர், ஈரோடு, நீலகிரி மற்றும் அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.
மேலும், அனுமதிக்கப்படும் ஆதரவற்ற நோயாளிகள் ஒரு சில நேரங்களில் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் மூலம் மருத்துவமனைக்கு வெளியே தள்ளப்படுகின்றனர். இன்னும் சில நேரங்களில், ஆதரவற்ற நோயாளிகள் கையில் குத்திய ஊசியைக் கூட கழட்டாமல் மருத்துவமனையில் இருந்து வெளியேறுகின்றனர்.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் கரடிவாவி பகுதியைச் சேர்ந்த முத்தம்மாள் என்ற 85 வயது மூதாட்டி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவமனையிலிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர், கோவை ரயில்வே பாலம் மேற்பகுதியில் உள்ள தண்டவாளம் அருகே ஆபத்தான நிலையில் தள்ளாடியபடி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவரை கண்ட சமூக ஆர்வலர்கள், கோவை அரசு மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து மூதாட்டியை மீட்க வந்த மருத்துவமனை ஊழியர்கள், அவரை பாலத்தில் இருந்து பத்திரமாக அழைத்துச் சென்று மீட்பு வாகனத்தில் ஏற்றிச் சென்று அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதித்தனர்.
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி மருத்துவமனையில் இருந்து வெளியே சென்ற நிலையில், சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் முயற்சியால் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்த சம்பவம் அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது.