திருப்பூர்: திருப்பூர் அருகே வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து விற்று மது அருந்தி வந்த கணவனை கட்டையால் தாக்கி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர்: திருப்பூர் அருகே வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து விற்று மது அருந்தி வந்த கணவனை கட்டையால் தாக்கி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் மங்கலத்தை அடுத்த மீனாட்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மனைவி உமாதேவி. இவர்களுக்கு நிவேதன் என்ற மகன் உள்ளார். கணவன்-மனைவி இருவரும் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டின் மாடிப்படியில் இருந்து வெங்கடேசன் தவறி கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் வேலைக்குச் செல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளானார். வீட்டில் போதிய வருமானம் இல்லாத நிலையில் வீட்டில் உள்ள பொருட்களை ஒவ்வொன்றாக விற்று மது குடித்து வந்துள்ளார்.
இதனிடையே, கடந்த 17ம் தேதி வெங்கடேஷ் வீட்டிலிருந்த மிக்ஸியை எடுத்து விற்று அந்த பணத்தில் மது அருந்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உமாதேவி கட்டையால் தாக்கியதில் வெங்கடேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உமாதேவி, வெங்கடேசனை பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு [இன்னார் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் உயிரிழந்தார்.
இந்நிலையில், வெங்கடேசனை பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த போது, இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து ஏற்பட்டதாக காவல்துறையிடம் உமாதேவி தெரிவித்துள்ளார் அதன் அடிப்படையில் காவல்துறையினர் விபத்து வழக்காக பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அவரது பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது.
இதனையடுத்து பிரேதப் பரிசோதனை முடிவுகள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அதில் வெங்கடேசன் இருசக்கர வாகனத்தில் விழுந்து உயிரிழந்தார் என எந்த ஆதாரமும் இல்லாமல் கட்டையால் தாக்கப்பட்ட அதற்கான அறிகுறி இருப்பதாக மருத்துவர்கள் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பின்னர் காவல்துறையினர் உமாதேவியிடம் விசாரித்தபோது, வெங்கடேசன் அடிக்கடி வீட்டிலிருந்த பொருட்களை எடுத்து விற்று, அதில் மது அருந்தி வந்ததாகவும் சம்பவத்தன்று வேலைக்கு சென்று திரும்பி வந்தபோது வீட்டில் மது மற்றும் இறைச்சியுடன் இருந்ததை கண்டு கேள்வி கேட்ட போது, வீட்டில் இருந்த மிக்ஸியை விற்று வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட போது வெங்கடேசன் உமாதேவியை தாக்க முயன்றதாகவும் இதில் சுதாரித்துக்கொண்ட உமாதேவி அருகிலிருந்த கட்டையை எடுத்து வெங்கடேசனை தாக்கியுள்ளார். உண்மையைச் சொன்னால் தான் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் உறவினர்களிடமும் காவல்துறையிடம் இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து விபத்து வழக்காக பதிவு செய்த போலீசார், கொலை வழக்காக மாற்றி உமாதேவியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.