கோவை: தமிழகத்தில் மாநகாட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வாழும் மக்கள் பழைய சொத்துவரியை செலுத்தினால் போதும் என்ற அரசின் அறிவிப்பிற்கு கொடிசியா வரவேற்பு தெரிவித்துள்ளது
கோவை: தமிழகத்தில் மாநகாட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வாழும் மக்கள் பழைய சொத்துவரியை செலுத்தினால் போதும் என்ற அரசின் அறிவிப்பிற்கு கொடிசியா வரவேற்பு தெரிவித்துள்ளது
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் தொழில், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கான சொத்துவரி உயர்வுக்கான அறிவிப்பு வெளியானது. அதன்படி தொழில் வணிக நிறுவனங்களுக்கு 100% வரி உயர்வும், வீடுகளுக்கு 50% வரி உயர்வும் விதிக்கப்பட்டு, அது 01.04.2012ம் தேதி என்ற முன் தேதியிலிருந்து கட்டப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் மக்களும், தொழில், வணிக நிறுவனங்களை நடத்துவோரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்ற நிலை ஏற்பட்டது.
இதுதொடர்பாக, கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்கமான கொடிசியா தலைவர் ராமமூர்த்தி, சீமா தலைவர் கிருஷ்ணகுமார், சைமா இணைச் செயலாளர் கணேஷ் மற்றும் கோவையின் பல தொழில் வணிக அமைப்புகளுடன் இணைந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவர்களை சந்தித்து வரி உயர்வை குறைக்கும்படி கோரிக்கை வைத்தனர். மேலும் தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வேண்டுகோள் மூலம் வரி உயர்வை குறைக்கும்படி மனு அளித்தனர்.
இதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. பழைய வரிப்படி செலுத்தினால் போதும் என்றும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உயர்த்தப்பட்ட சொத்துவரியை குறைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்நிலையில், சொத்துவரியை மறு பரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதற்கும் ஏற்கனவே கூடுதலாக செலுத்திய சொத்து வரி, செலுத்தியவர்களின் சொத்து வரி கணக்கில் அடுத்த அரையாண்டுகளில் ஈடு செய்யப்படும் என்ற அரசின் அறிவிப்பிற்கு கொடிசியா வரவேற்பு தெரிவித்துள்ளது.
மேலும், தொழில் மற்றும் பொருளாதார சூழல் மந்தமாக உன்ள நிலையில் தங்களின் கோரிக்கையை ஏற்று “சொத்து வரி உயர்வை" நிறுத்தி வைத்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்களுக்கு கொடிசியாவின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக கொடிசியா தலைவர் ராமமூர்த்தி கூறியுள்ளார்.