கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பத்து நாட்களுக்கும் மேலாக உரிய சிகிச்சையின்றி அலைக்கழிக்கப்பட்டு வந்த நோயாளியின் உடல்நிலை மோசமாகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பத்து நாட்களுக்கும் மேலாக உரிய சிகிச்சையின்றி அலைக்கழிக்கப்பட்டு வந்த நோயாளியின் உடல்நிலை மோசமாகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை புலியகுளம் அருகேயுள்ள அம்மன் குளம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி(65). ஏழ்மையில் வாடும் கட்டிடத் தொழிலாளியான இவருக்கு அடிக்கடி மயக்கம் ஏற்படுவதையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அனுமதிக்கப்பட்டதிலிருந்து மருத்துவர்கள், மருத்துவ உதவிப் பணியாளர்கள், ஸ்ட்ரெச்சர் தள்ளுபவர்கள், ஸ்கேன் எடுப்பவர்கள் என பலர் தங்களின் பணிகளில் பல்வேறு காரணங்களை சொல்லி உரிய சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை.
குறிப்பாக நோயாளியின் தலையில் உள்ள கட்டியை அளவீடு செய்ய கூட கடந்த 10 நாட்களில் உரிய முயற்சி எடுக்கவில்லை. ஸ்கேன் சென்டரில் கேட்டால் மருத்துவர் உதவியின்றி ஸ்கேன் எடுக்க முடியாது என்றும் மருத்துவர்களிடம் கேட்டால் நாங்கள் எத்தனை பேரை பார்ப்பது என்று புறக்கணித்துள்ளனர். செவிலியர்களிடம் கேட்டால் பதில் கூட சொல்லாமல் அலட்சியமாக சென்றதாக கூறப்படுகிறது. மேலும், வார்டில் இருந்து நோயாளியை ஸ்கேன் சென்டருக்கு அழைத்துச்செல்ல, பணம் கொடுத்தால் மட்டுமே ஸ்ட்ரெச்சர் கிடைக்கும் அவல நிலையும் உள்ளது.
இந்த நிலையில் நேற்று நோயாளியின் மகன் ராஜேஷ் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்த தாமரை மற்றும் ராசாத்தி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நோயாளிக்கு சிகிச்சை கொடுக்க மருத்துவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், எம்ஆர்ஐ ஸ்கேனுக்காக காத்திருந்து தினமும் உணவு கூட உண்ணாமல் கடைசிவரை பசியோடும் மிகுந்த மன உளைச்சலோடும் எந்தவித சிகிச்சையும் இல்லாததால், உடல்நிலை மோசமாகி நோயாளி அந்தோணி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
10 நாட்களுக்கும் மேலாக தனது தந்தையின் உயிருக்காகப் போராடிய மகன் ராஜேஷ், தனது தந்தையை இங்கு அழைத்து வராமல் வீட்டில் இருந்தால் கூட நிம்மதியாக உயிரிழந்திருப்பார் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
மேலும், இந்த அலட்சியங்களுக்கு முக்கிய காரணியாக இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய நோயாளியின் மகன் ராஜேஷ், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நாளை யாருக்கும் நடைபெறாமல் இருக்கும் என வேதனையுடன் தெரிவித்தார்.