கோவை: டிரான்ஸ் கொழுப்பு (கெட்ட கொழுப்பு) காரணமாக இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் இந்தியாவில் வருடந்தோறும் அறுபதாயிரம் பேர் உயிர் இழப்பதாக கன்ஸ்யூமர் அண்டு சிசிக் ஆக்ஷன் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
கோவை: டிரான்ஸ் கொழுப்பு (கெட்ட கொழுப்பு) காரணமாக இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் இந்தியாவில் வருடந்தோறும் அறுபதாயிரம் பேர் உயிர் இழப்பதாக கன்ஸ்யூமர் அண்டு சிசிக் ஆக்ஷன் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் மற்றும் சிட்டிசன் கன்ஸ்யூமர் & சிவிக் ஆக்ஷன் குரூப் (CAG) இணைந்து குழந்தைகள் தினத்தை முன்னிட்டு டிரான்ஸ் கொழுப்பு (கெட்ட கொழுப்பு) பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஆர்.கே.ரங்கம்மாள் பள்ளியில் நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் டிரான்ஸ் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்த்திட வேண்டும் என்றும் இதனை உண்பதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது, டிரான்ஸ் கொழுப்பு காரணமாக இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் இந்தியாவில் வருடந்தோறும் அறுபதாயிரம் பேர் உயிரிழப்பதாக கன்ஸ்யூமர் அண்டு சிசிக் ஆக்ஷன் நுகர்வோர் அமைப்பின் ஆராய்ச்சி பிரிவு கீர்த்தனா மற்றும் சவிதா தெரிவித்தனர்.
பின்னர் ராமகிருஷ்ணா குழந்தைகள் நல இருதய மருத்துவர் டாக்டர்.தேவபிரசாத் பேசுகையில், மாணவர்கள் சரியான அளவில் எடையை வைத்து கொள்ள வேண்டும் எனவும் இருதயம் சீராக இயங்க நல்ல கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை உண்ண வேண்டும் என்றார். கெட்ட கொழுப்பினால் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து மாணவர்களிடையே விழிப்புணர்வு கையெழுத்தைத் துவக்கி வைத்து பேசிய உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன், கேக், பிசா, பர்கர், பிரட் போன்ற உணவு வகைகளை அதிகம் உண்பதை தவிர்க்க வேண்டும் எனவும் 70-80% கடலை, பயிறு வகைகள் பழங்களை எடுத்து கொள்ள வேண்டும் என்றவர், செயற்கை நிறமி கொண்ட மாமிச வகைகளை முற்றிலுமாக தவிர்த்திட வேண்டும் என மாணவர்களிடம் வலியுறுத்தினார்.
மேலும், மறு சுழற்சி செய்யப்பட்ட எண்ணெய் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை தவிர்த்திட வேண்டும், பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்க மாணவர்கள் முன்வர வேண்டும் என அறிவுறத்தபட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிட்டிசன் வாய்ஸ் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், முன்னாள் ஒய்வு பெற்ற காவல் அதிகாரி வேலு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.