கோவை: கோவை பீளமேடு பகுதியில் பண ஆசை காட்டி நூதன முறையில் ஏமாற்றிய தனியார் நிறுவனத்தின் அலுவலகத்தை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை பீளமேடு பகுதியில் பண ஆசை காட்டி நூதன முறையில் ஏமாற்றிய தனியார் நிறுவனத்தின் அலுவலகத்தை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை பீளமேடு ஃபன் மால் பின்புறம் யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன் என்ற பெயரில் சுமார் 3 வருடங்களுக்கும் மேலாக நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த முதலீட்டு நிதி நிறுவனத்தில் தமிழ்நாடு உட்பட கேரளா, கர்நாடகா ஆந்திரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் முதலீடு செய்துள்ளனர்.
மேலும், ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் கொடுத்தால் 10 மாதத்தில் இரண்டு லட்ச ரூபாய் கிடைக்கும், எவ்வளவு பணம் கொடுத்தாலும் இரண்டு மடங்காகக் கிடைக்கும் என ஆசை வார்த்தைகளை கூறி குழுக்களை அமைத்து பல கோடி ரூபாய்களை வசூல் செய்துள்ளனர்.
இதுபோல, கிட்டத்தட்ட 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட நபர்களிடம் இருந்து சுமார் 2,000 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், ஏற்கனவே பொருளாதார குற்றப்பிரிவிலும் பாதிக்கப்பட்டோர் புகார் அளித்துள்ளனர். அதேபோல, இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினரை வைத்து பாதிக்கப் பட்டவர்களுக்கு பணம் சென்றடைய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இப்படியிருக்க யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன் நிறுவனத்தின் உரிமையாளர் கௌதம் ரமேஷ் மீண்டும் முதலீட்டாளர்களிடம் இருபத்தைந்தாயிரம் ரூபாய் கட்டும்படி தெரிவித்துள்ளார்.
அப்படி கொடுத்தால் தங்களிடம் பெற்ற பணத்தை அவரவர் கணக்கில் செலுத்தி விடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதை நம்பிய முதலீட்டாளர்கள் மீண்டும் பணத்தை கட்டியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து கௌதம் ரமேஷ் முதலீட்டாளர்களிடம் இன்று, நாளை என மாறி மாறி பணத்தை தருவதாக ஏமாற்றி கடைசியில் தலைமறைவாகினர்.

இதனால், ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் இன்று அவர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பீளமேடு காவல் ஆய்வாளர் வந்து, பாதிக்கப் பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதேபோல புகார் கொடுக்காத பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் புகார் கொடுக்கவும் பொருளாதார குற்றப்பிரிவில் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின் முதலீட்டாளர்கள் கலைந்து சென்றனர்.