கோவை: மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிக்னல் பூங்கா அமைச்சர் எஸ்.பி வேலுமணி திறந்து வைத்தார்.
கோவை: மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிக்னல் பூங்கா அமைச்சர் எஸ்.பி வேலுமணி திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாரில் உள்ள சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளியின் சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விபத்துகளை தவிர்க்க சிக்னல் பூங்கா துவங்கப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் சாலையில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பது அதிகரித்து வரும் சூழலில் அதற்கு முக்கிய காரணமாக இருப்பது சாலை விதிகளை மதிக்காமல் ஏற்படும் விபத்துகளே ஆகும். எனவே, விபத்தை தவிர்க்க இளைய சமுதாயத்திடம் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் சாலையில் உள்ளது போல் சிக்னல்கள், நடைபாதைகள் என அனைத்தும் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற பூங்கா துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ரிப்பன் வெட்டி சிக்னல் பூங்காவை துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் சிக்னல் பூங்காவில் சைக்கிளில் பயணித்து சிக்னல்கள் நடைமுறை குறித்து விளக்கினர். இந்த சிக்னல் பூங்காவில் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பயன்படுத்தி சாலை விதிகளை அறிந்துகொள்ள வேண்டும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓ.கே சின்னராஜ், பி.ஆர்.ஜி அருண்குமார் ரூட்ஸ் நிறுவன இயக்குநர் ராமசாமி, பள்ளி செயலாளர் கவிதாசன் உப்டட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.