கோவை : கோவையில் சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த லாரி திடீரென பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளின் மீது மோத வந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கோவை : கோவையில் சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த லாரி திடீரென பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளின் மீது மோத வந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கோவை பல்லடம் செட்டிபாளையம் சாலையில் உள்ள சித்தநாயகன்பாளையம் கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அலுவலகம் அருகே கட்டப்படாத பேருந்து நிறுத்தம் ஒன்று உள்ளது.

இந்நிலையில், இன்று காலை பேருந்துக்காக சித்தநாயகன்பாளையம் கிராமத்தை சேர்ந்த தாமோதர பிரகாஷ், தீபிகா, சுசீலா ஆகிய மூவர் காத்திருந்தனர். அப்போது, அந்த வழியே தாறுமாறாக வந்த லாரியானது பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகள் மீது மோத வந்தது. இதையடுத்து, அதிர்ச்சியடைந்த பயணிகள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள பின்புறமாக ஓடியபோது சாலையின் அருகே தோண்டப்பட்ட குழியில் விழுந்தனர்.

இதையடுத்து, இவர்கள் 3 பேரும் நொடிப்பொழுதில் நூலிழையில் உயிர் தப்பினர். இந்த காட்சிகள் அருகே உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பலமுறை அந்த பகுதியில் வேகத்தடையும், முறையான பேருந்து நிறுத்தமும் அமைத்துத் தரக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் தற்போது அதிவேகமாக வந்த லாரி ஆனது பொதுமக்கள் உயிரை பறிக்க முற்பட்டுள்ளது.
மேலும், அடுத்தகட்டமாக பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன், இந்த சாலைகளில் பேருந்து நிறுத்தங்கள் மற்றும் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.