கோவை : கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்த 70 பேர் சிகிச்சை முடிந்து நல்ல முறையில் வீடு திரும்பியுள்ளதாக கோவை அரசு மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் அசோகன் தெரிவித்துள்ளார்.
கோவை : கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்த 70 பேர் சிகிச்சை முடிந்து நல்ல முறையில் வீடு திரும்பியுள்ளதாக கோவை அரசு மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் அசோகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். இதையடுத்து, காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழையை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு, மலேரியா போன்ற பல்வேறுவகையான வைரஸ் காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றன. கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த நோயாளிகள் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இதுகுறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் அசோகன் கூறுகையில்;-
கோவை உட்பட திருப்பூர், ஈரோடு, நாமக்கல் ,திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த நோயாளிகள் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பினால் வருபவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இப்படி அளிக்கப்படும் சிகிச்சைகள் மூலம் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து பலர் குணமடைந்துள்ளனர்.
குறிப்பாக கடந்த மாதம் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் சிகிச்சை பெற்றுவந்த 73 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல இந்த மாதம் தற்போது வரை 70 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் . இதன் தொடர்ச்சியாக இன்று டெங்கு காய்ச்சல் பாதிப்பில் 18 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களும் விரைவில் நலமுடன் வீடு திரும்புவார்கள் என அவர் தெரிவித்தார்.