கோவை : தரமில்லாத பொருளை விளம்பரப்படுத்த நடித்த நடிகை அஞ்சலி மீதும், கலப்படம் நிறைந்த எண்ணெயை பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி சுடர் பார்வை மக்கள் இயக்கத்தினர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தனர்.
கோவை : தரமில்லாத பொருளை விளம்பரப்படுத்த நடித்த நடிகை அஞ்சலி மீதும், கலப்படம் நிறைந்த எண்ணெயை பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி சுடர் பார்வை மக்கள் இயக்கத்தினர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தனர்.
பொதுமக்களுக்கு கலப்படமில்லாமல் தரமான உணவு பொருட்களை தரவேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆண்டுதோறும் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது பொதுமக்கள் பயன்படுத்த தகுதியற்ற எண்ணெய் பொருட்களை ஸ்ரீ அன்னபூர்ணா அக்ரோ புட்ஸ் விற்பனை செய்து வருவதாக சுடர் பார்வை மக்கள் இயக்கத்தினர் உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும், இந்த புகாரில் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அரசு விதிமுறைகளை மீறி மூலப்பொருட்களின் அளவுகள் அதிகமாக இருப்பதால் இந்த எண்ணெய் நிறுவனத்தினை தடை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அதேபோல தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், மக்கள் அந்த எண்ணெய்யை வாங்கிப் பயன்படுத்தாதவாறு பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தரமில்லாத எண்ணெய்யை விளம்பரம் செய்யும் நோக்கில் நடித்த நடிகை அஞ்சலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் வலியுறுத்தி உள்ளனர்.

இதைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் பேசுகையில், இந்த புகார் தொடர்பாக இந்த குறிப்பிட்ட எண்ணெய்யை ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் அடிப்படையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் நடிகை மீதான புகாருக்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது என்று தெரிவித்தார்.