விற்பனை விளிம்புத் தொகையை உயர்த்தக் கோரி, பெட்ரோல் நிலையங்களில் விற்பனை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.முரளி கடலூரில் வியாழக்கிழமை கூறியது:
இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள் அதன் முகவர்களுக்கு விற்பனை விளிம்புத் தொகையை உயர்த்தி வழங்கவில்லை. இதனால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதையொட்டி, நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
அதன்படி, வருகிற 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை பெட்ரோல் விற்பனை நிலையங்களில் விளக்குகளை அணைத்து விற்பனை நிறுத்தப் போராட்டம் நடைபெறும். இதையடுத்து, நவம்பர் 3, 4ஆம் தேதிகளில் எண்ணெய் நிறுவனங்களிலிருந்து தொடர் கொள்முதல் நிறுத்தப் போராட்டம் நடைபெறும்.
அதைத்தொடர்ந்து, மாதத்தில் 2 மற்றும் 4ஆவது சனிக்கிழமைகளில் பெட்ரோலிய பொருள்களின் விற்பனை நிறுத்தப்படும். நவம்பர் 5 ஆம் தேதி முதல் விற்பனை நிலையங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும். விற்பனை நிலையங்களில் அமைந்துள்ள எண்ணெய் நிறுவனங்களின் சின்னங்களில் உள்ள விளக்குகள் நவம்பர் 5ஆம் தேதி முதல் அணைக்கப்படும்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விற்பனை நிலையங்களில் விற்பனை நிறுத்தப்படும். தமிழகம், புதுவையில் 4,500 பெட்ரோல் நிலையங்கள் உள்ளன. அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் இந்தப் போராட்டம் நடைபெறும் என்றார் அவர்.