கோவை : மேட்டுப்பாளையம் அருகே குடியிருப்புக்குள் நுழைந்து கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறைக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை : மேட்டுப்பாளையம் அருகே குடியிருப்புக்குள் நுழைந்து கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறைக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை அருகே உள்ள கெம்மாரபாளையம் பனப்பாளையம் புதூர், கண்டியூர், வெள்ளியங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதியாக உள்ள இந்த கிராமத்தில் கால்நடை வளர்ப்பு என்பது பிரதானமாக இருந்து வரும் நிலையில், கால்நடைகளை சிறுத்தைகள் வேட்டையாடுவது என்பது தொடர்ந்து அவ்வப்போது நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு இந்த கிராம பகுதிகளில் நுழைந்த சிறுத்தை ஒன்று, மேட்டூர், பணப்பாளையம், வெள்ளியங்காடு போன்ற பகுதிகளில் பொதுமக்கள் வளர்த்து வந்த ஆடு, மாடு என கால்நடைகளை வேட்டையாடி வந்தது. இதனையடுத்து அதனைப் பிடிக்க வனத்துறை கூண்டு வைத்தனர். இருப்பினும் சிறுத்தை அதில் சிக்கி தப்பிச் சென்றது. அதன் பின்னர் சிறுத்தை நடமாட்டம் குறைந்த நிலையில் தற்போது அந்த சிறுத்தை மீண்டும் தனது வேட்டையைத் துவக்கியுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை பனப்பாளையம் புதூர் கிராமத்தில் நுழைந்த சிறுத்தை, சர்தார்பாஷா என்பவருடைய வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்த ஆடுகளை கடித்து குதறியது. நாய்கள் குறைப்பதை கண்டு எழுந்து வீட்டுக்கு வெளியே வந்து பார்த்த சத்தார்பாஷா ஆடுகள் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து நாய்கள் சிறுத்தையை துரத்திச் சென்றதையும் அவர் பார்த்துள்ளார்.
இதுகுறித்து காரமடை வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சிறுத்தையின் கால் தடங்களையும் இறந்த ஆடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் இது குறித்து விவசாயிகளிடம் விசாரணை நடத்தினர் . இது குறித்து பேசிய அப்பகுதி மக்கள், தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை பொதுமக்களை தாக்குவதற்கு முன் கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.